Sunday, February 10, 2019

*காலங்கள் திரும்ப கிடைக்காது*


இரண்டு  நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்,. ஒருவர் சொன்னார், "கேரளாவில் ஒரு இடம் இருக்கிறது; அது ஒரு டீ எஸ்டேட்; அங்கு செல்போன் வேலை செய்யாது; நாம் அங்கே போய்விட்டால் வெளி உலகை விட்டு முற்றிலும் துண்டிக்க படுவோம்;
இங்கே இருக்கும் டென்ஷன் எல்லாம் குறைக்க, அங்கே போய் ஒரு மூன்று நாள் இருக்கலாம் போல இருக்கிறது". வெளி உலக தொடர்பே அற்று நிம்மதியாக இருக்கலாம் என்றார்.


ஒருவர் சொன்னார், "எனக்கு இது சரிப்பட்டு வராது; இதை நான் விரும்புவதும் இல்லை" என்றார்.

அதற்கான காரணத்தைச் சொல்கிறார்..

நம்மைச்சுற்றி இருப்பவர்கள் யார்? யார்?
முதலில் மனைவி.
பிறகு பிள்ளைகள்.
அடுத்து உறவுகள்.
பின், நண்பர்கள்.
பின்பு வேலையின் நிமித்தம் தொடர்பில் உள்ளவர்கள்.
அதன் பின் முற்றிலும் தெரியாதவர்கள். அதாவது, கடைவீதியில் நடப்பவர்கள் போல, அறிமுகம் இல்லாதவர்கள்.

இந்த உறவுகள் அற்புதமானவை. மனைவி என்ற ஒருத்தியோடு பேசிக் கொண்டே இருங்கள்;
இல்லாவிட்டால் ஏதாவது சண்டையாவது போடுங்கள். பின்பு சமாதானம் ஆகி உறவாடுங்கள்.
எல்லா ஆண்களுக்கும் ஒரு நாள் வரும். ஒருவேளை அவள் முந்தி மரணமடைந்தாள்?அப்போது தெரியும், பிரிவு என்றால் என்னவென்று.
ஆகவே இப்போது கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் அற்புதமானவை; வீணாக்க வேண்டாம். அதிலும் பிரிந்து இருக்கவே வேண்டாம்.

அடுத்து, பிள்ளைகள்;
பள்ளி படிப்பு முடியும் வரைதான் அவர்கள் உங்களோடு இருப்பார்கள்.
அதன் பின் அவர்கள் உலகம் வேறு; அதில் நீங்கள் நிச்சயமாய் இருக்கவே மாட்டீர்கள். அப்போது நீங்கள்
அவர்களோடு தொலைபேசி மூலமாக பேசக்கூடநேரம் பார்க்க வேண்டும்.

இப்போது அவர்களிடம் அதிக நேரம் செலவு செய்யுங்கள்.
வெளிநாட்டில் தனது சின்ன குழந்தைகளை பிரிந்து பணி செய்யும் தகப்பன்மார்களுக்கு இந்த வேதனை புரியும்.
இப்படி இல்லாமல், உங்கள் பிள்ளைகள் உங்கள் அருகிலேயே இருந்தால் இது அற்புதமான தருணம். ஒரு நொடியைக்கூட வீணாக்க வேண்டாம். சும்மா அவர்களை பார்த்துக் கொண்டாவது இருங்கள்.

அடுத்து உறவுகளும், உடன் பணி செய்யும் தோழர்களும்.

இதைப்பற்றி தெரிந்து கொள்ள, நீங்கள் அடுத்த மாநிலத்திலோ அல்லது வேறு நாட்டிலோ இருந்தால்,
இது புரியும்.

வட நாட்டில் இருந்தால் அங்கு உள்ள சர்மாவும், பாண்டேயும், தூபேயும், நம்மோடு நட்பாக இருப்பார்கள். ஆனால் தோள் மேல் கைபோட்டு "வாடா மாப்பிளே" என்று கூற முடியாது. ஒரு இடைவெளி இருந்து கொண்டேதான் இருக்கும்.

எல்லாம் ஒரே இடத்தில் கிடைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களே!
வாழ்கையை ருசியுங்கள்;
அனுபவியுங்கள்.
காலமே ஒரு நாள் நம்மை தனிமைப்படுத்த போகிறது.
அன்று யாரும் நம்மை வந்து பார்க்கப்போவது இல்லை.
நாம் நினைத்தால் கூட வெளியே போக முடியாது.

தனிமையே நம்மை கொல்லப்போகிறது.

அதுவரை, கடவுள் நமக்கு தந்த சினேகங்களோடு பேசுவோம்; சண்டையிடுவோம்; கொஞசி குலாவுவோம்; ஏதாவது செய்வோம். ஆனால் தனிமை வேண்டாம்;
அது மோசமானது. தற்கொலைக்குச் சமமானது.

*காலங்கள் திரும்ப கிடைக்காது..* Thanks Mr. Mukil Kumar

No comments: