Saturday, June 11, 2016

நினைத்துப் பார்க்கிறேன் - இணையத்தமிழோடு இணைந்த கதை

நினைத்துப் பார்க்கிறேன்

1999 கனடா வந்தேன். வந்தநாள் முதலாக இணையத் தமிழில் இரண்டறக் கலந்துவிட்டேன்.

தமிழ்  உகலம் என்னும் யாஹூ குழுமம்

இங்கே கொட்டியத் தமிழ் மடல்கள் எண்ணிலடங்கா. இவர்கள் நல்ல தமிழில் மட்டுமே உரையாட உலகத்தோரை அழைத்தவர்கள். ஆஸ்தான கவிஞன் என்ற உயர்வை எனக்குத் தந்தவர்கள். இங்கேதான் உலகின் எந்த மொழியிலும் நிகழாத ஒரு புதுமை நிகழ்ந்தது.

அன்புடன் இதயம் என்ற என் கவிதைத் தொகுப்பை இணையத்திலேயே வெளியிட்டார்கள். மாலன் அதற்கான தலைவர்.

இங்கே நான் சந்தித்த தமிழ் நேசர்களைப் பட்டியலிட்டு எழுதத் தொடங்கினால் ’தமிழ் உலகம் தந்த என் உலகம்’ என்ற நீண்ட தொடர் எழுத வேண்டி வரும். அதெல்லாம் நான் பணி ஓய்வு பெறும்போது பார்த்துக்கொள்ளலாம்.


தினம் ஒரு கவிதை

என்.சொக்கனின் தினம் ஒரு கவிதை என் கவிதைகளுக்கு முற்றம் தந்து  அழகாக வடிவமைத்து உலகெலாம் பரவச் செய்தது. சிறு வயதிலிருந்தே கவிதைகள் எழுதி வந்தாலும், நா. பார்த்தசாரதியின் தீபம் இதழில் தொடர்ந்து கவிதைகள் இட்டுவந்திருந்தாலும், இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் மாநில சிறந்த கவிதையாக என் கவிதை ஒன்று தேர்வு செய்யப்பட்டு இந்தியில் மொழிமாற்றம் ஆகியிருந்தாலும், அலிபாபா, தாய், குமுதம், திசைகள் என்று பல பத்திரிகைகளில் என் கவிதைகள் அப்போதே வெளிவந்திருந்தாலும், ஒரு புத்தகம் போடவேண்டும் என்ற துணிச்சலை தினம் ஒரு கவிதையும் தமிழ் உலகமும்தான் எனக்குத் தந்தன.

கூடவே கனடா உதயன் பத்திரிகை என் கவிதைகளுக்குத் தங்கப் பதக்கம் தந்து பாராட்டியதும் ஒரு முக்கிய காரணம்

அன்புடன் என்னு கூகுள் குழுமம்

யாஹூ குழுமங்களில் மட்டுமே உலாவந்த இணையத் தமிழை. திஸ்கியில் மட்டுமே திளைத்திருந்த இணையத் தமிழை முதன் முதலில் கூகுள் குழுமத்திற்குக் கொண்டு வந்த குழுமம். இது முழுக்க முழுக்க யுனித்தமிழ் என்னும் யுனிகோடு தமிழில் நடத்தப்படும் குழுமம். உலகில் இதுவே இப்படி உருவான முதல் குழுமம். அதைத் தோற்றுவித்து வளர்த்த பணி என்னுடையதுதான்.

அன்புடன் அனுபவங்களைப் பற்றி நான் சொல்ல, என் ஆயுளே போதாது.

இங்கே ஒவ்வொருவருக்கும் இணையத் தமிழ் சொல்லிக்கொடுக்கப்பட்டது. இணையத்தில் எப்படி தமிழில் எழுதுவது என்று சொல்லிக்கொடுக்கப்பட்டது. கூகுள் குழுமத்திற்கு அழைப்பு விடுத்து ஆக்கப்பூர்வமான கட்டுரைகள் படைக்கப்பட்டன.

இன்னும் வலைப்பூ, வலைத்தளங்கள் என்று நிறைய உண்டு

தற்போது முகநூல் டிவிட்டர்களிலும் தமிழ்ப்பந்தல் இட்டு தமிழ் தாகத்தை இணையக் கோப்பைகளில் அள்ளிப் பருக உலகத்தாருக்கு அன்புடன் தரப்படுகிறது

அன்புடன் புகாரி
இடமிருந்து வலமாக:

1. பசுபதி - ஓய்வு பெற்ற டொரோண்டோ பல்கலைக்கழக பேராசிரியர். யாப்பிலக்கண தாசர். உலகத்தமிழ் தேனெல்லாம் கொண்டுவந்து தன் வலைப்பூவில் சேர்ப்பவர்

2. மு. இளங்கோவன் - செம்மொழி இளம் அறிஞர். தொல்காப்பிய மன்றப் பொறுப்பாளர்களுள் ஒருவர். இணையம் வழி தமிழ் பரப்புவதில் முனைப்பானவர்

3. அன்புடன் புகாரி - என்னைப் பற்றி நான் என்ன சொல்வது ;-)

4. நாச்சியப்பன் - கனடா தமிழ்நாடு கலாச்சார சங்கத்தின் தலைவர்

5. சுதர்சன் - கனடா தமிழ்நாடு கலாச்சார சங்கத்தின் ஆலோசனையாளர், முந்நாள் தலைவர், தமிழ்நாடு கலாச்சரச் சங்கத்தின் வளர்ச்சித் தூண்களுள் ஒருவர்.

6. கே.வி.கே பெருமாள் - டெல்லி முத்தமிழ்ப் பேரவையின் துணைத் தலைவர். பட்டிமன்றப் பேச்சாளர்

7. செல்வம் - கனடாவிலிருந்து வெளிவரும் காலம் என்ற பத்திரிகையின் ஆசிரியர். காலம் செல்வம் என்று அழைக்கப்படுபவர்


http://anbudanbuhari.blogspot.in

No comments: