Saturday, June 11, 2016

நான் ஒரு முஸ்லிம் என்பதற்காகவே

நான் ஒரு முஸ்லிம் என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றைப் பாராட்டுவோர்
பலர் பலர்

நான் ஒரு முஸ்லிம் என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றைத்  தூற்றுவோர்
சிலர் சிலர்

நானொரு வெளிநாட்டுவாசி என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றை வியப்போர்
பலர் பலர்


நானொரு வெளிநாட்டுவாசி என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றை மறைப்போர்
சிலர் சிலர்

சிலரா பலரா
நம்மையும் நம் வாழ்வையும்
தீர்மானிப்பவர்
சிலரா பலரா

சிலரும் அல்லர்
பலரும் அல்லர்
உன்னையும் உன் வாழ்வையும்
தீர்பானிப்பவன்
நீதான் நீதான்

உன் தமிழ்ப்பற்று உனக்குள்
எவருக்காகவும் வந்துவிடவில்லை
உனக்காகவே உன்னால் உனக்குள்
வந்தது வளர்ந்தது

உன் கவிதை மோகம்
எவர் வளர்த்தும் உனக்குள்
பற்றித் தொற்றி வளர்ந்துவிடவில்லை
உன் மனம் வளர்த்தே
மனதோடு மனதாக தளைத்து வளர்ந்தது


அன்புடன் புகாரி

* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *
http://anbudanbuhari.blogspot.in

No comments: