Wednesday, June 3, 2015

" எங்கிருந்து வந்ததோ அங்கே சென்று விட்டது!"- dr.habibullah

அந்த கலையரங்கம், மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மகான் ஒருவர், "கடவுள்" என்ற பொருள் பற்றி, மகா பிரசங்கம் ஒன்றை, நிகழ்த்திக் கொண்டிருந்தார். அவரது பேச்சில் லயித்து, கரைந்து கொண்டிருந்தனர் ஊர் மக்கள்.

கொழுந்து விட்டெறியும் மெழுகுவர்த்தியை சுற்றி, சுழல்கின்ற ஒளி வட்டத்தை, உற்று நோக்கி, மனதை ஒரு முகப்படுத்தும் பயிற்ச்சிக்கு, அவர் மக்களை தயார் படுத்திக் கொண்டிருந்தார்.

"ஒளி மயமானவன் இறைவன்." 'இறைவனை அறிய வேண்டுமானால், முதலில் இந்த ஒளி யைப் பற்றி, அறிய வேண்டும். இந்த ஒளி, இதற்கு முன் எங்கிருந்தது; இப்போது இங்கு எப்படி வந்தது?'

'இப்போது சொல்லுங்கள்! இந்த ஒளியானது, இந்த அரங்கத்திற்குள் எங்கிருந்து வந்தது? என்று, உங்களில் எவருக்காவது சொல்ல இயலுமா? விடை தெரிந்தவர்கள்.......!!, தாராளமாக அதை சொல்ல முன் வரலாம்.'

மகான் முன்னிலையில் எழுந்து பேச எவருக் கும், நாவு ஒத்துழைக்கவில்லை. முழு மவுனம் காத்தனர் சபையினர்.

மகான் பேச்சை தொடர்ந்தார்.....

'இந்த ஒளி எங்கிருந்து வந்தது, என்பதை அறியாத நீங்கள், இறைவனை அறிந்து கொள்ள முயர்ச்சிப்பது எவ்வளவு அறிவீனம்!'

அரங்கத்தில் முழு அமைதி நிலவியது.
கூட்டத்தின் நடுவிலிருந்து, ஒரு ஐந்து வயது சிறுவன் எழுந்தான். மேடையை நோக்கி நடந்தான். மகானின் அருகில் சென்றான். கண்ணி மைக்கும் நேரத்தில்.....! மெழுகுவர்த்தியின் ஒளியை, வாயால் ஊதி அணைத்தான். முழு அரங்கும் இருட்டில் மூழ்கியது. கூட்டத்தில் சற்று சல சலப்பு ஏற்பட்டது. சிறுவனின் செயல் கண்டு, மகானின் கோபம், எல்லை மீறியது. மேடையை சுற்றி நின்ற காவலர்கள், சிறுவனை அங்கிருந்து அகற்ற முயன்றனர். சாதுவான மகானைக் கூட, சிறுவனின் செயல், மிரள வைத்தது. அவரது கோபம் எல்லை மீறியது.

சிறுவன் பதறவில்லை.. ... அமைதியாக சிரித்தான். அவன் முகம், சிரிப்பால், மேலும் ஒளி பெற்றது. தொடர்ந்து - அவன் பேசிய வார்த்தைகள், அவையோரை வியக்க வைத்தன.

பெரியவரே....!
"ஒளி எங்கிருந்து வந்தது, என்று கேட்டீர்கள்..
நான், இப்போது உங்களை கேட்கிறேன்,
சொல்லுங்கள்!"

"ஒளி எங்கே போயிற்று!"

சிறுவனின் கேள்விக்கு மகானால் பதில் தர இயலவில்லை.
"நீயே பதிலையும் சொல்" எனறார் மகான்.

சிறுவன் தொடர்ந்தான்..

"ஒளி எங்கிருந்து வந்ததோ
அங்கே சென்று விட்டது!"

'மெழுகுவர்த்திகள் நாம்'

அரங்கம் அதிர்ந்தது, மக்களின் கர ஒலி விண்ணை முட்டியது. மெய்ப் பொருள்
கண்ட ஞானி போல், மகான் சிறுவனை
ஆரத் தழுவி முத்த மழை பொழிந்தார்.

 
dr.habibullah
Vavar F Habibullah

No comments: