Friday, June 19, 2015

ரஹ்மானே அன்பாளா ரமலானின் அருளாளா கையேந்திக் கேட்கின்றேன்..

 ரஹ்மானே அன்பாளா
ரமலானின் அருளாளா
கையேந்திக் கேட்கின்றேன்
கரம்நிறைப்பாய் பொறுப்பாளா!

கண்களில் மழைநீர் வழிகிறது--மனம்
கனத்தால் நொறுங்கிச் சரிகிறது
எண்ணம் நெருப்பாய் எரிகிறது--என்
இதயம் துயராய் வடிகிறது! (ரஹ்மானே...)

மானிடப் பதர்கள் வாசலிலே--கரம்
மலர்த்திக் கேட்பது பழியல்லவா?
தானெனும் ஆணவப் பேர்வழிகள்--தீத்
தணலில் நெளியும் புழுவல்லவா? (ரஹ்மானே...)

எனக்குச் சமமாய் எவனுண்டு--என
எண்ணித் திரிந்த நபரெல்லாம்
கணக்கு முடிந்து மறைகின்றார்--சிறு
கரையான் நக்கக் கரைகின்றார்! (ரஹ்மானே...)

மனிதன் தந்து நிறைவதில்லை--அந்த
மனிதன் மறுத்துக் குறைவதில்லை
பனிநீர் தாகம் தணிப்பதில்லை--சின்னப்
பானையில் பூமி உறைவதில்லை! (ரஹ்மானே...)

எவரையும் பழிக்கும் நோக்கமில்லை--பிறர்
என்னதான் செய்யினும் கவலையில்லை
சுவர்கள் எழுப்பிச் சூரியனை--நாம்
தொட்டு விடவும் முடிவதில்லை! (ரஹ்மானே...)

கேட்பதைத் தருபவன் நீயல்லவோ--என்
கேள்வியும் காற்றில் கரைவதுவோ
ஆட்சியின் அதிபன் சன்னதியில்--துயர்
அறுபடும் என்பது விதியல்லவோ? (ரஹ்மானே...)

இறைவா உன்தன் முன்னிலையில்--என்
எண்சாண் உடம்பால் பணிகின்றேன்
நிறைவாய் அருள்வாய் அருளாளா--உன்
நினைவே கதியெனத் துணிகின்றேன்! (ரஹ்மானே...)

( தேவையான கவிதைக் கண்ணியை எடுத்துக் கொள்ளவும்).
ஹனீபா நவ்ஷாத்துக்கு கொடுத்த மூன்றாவது கவிதை:--3--




அல்லாஹ்வின் அருள்கனிந்த அண்ணல்நபி சமுதாயம் [பகுதி ...

No comments: