Monday, May 16, 2016

கால்சியம் மாத்திரைகளும் மாரடைப்பு நோய் ஆபத்தும்: மருத்துவ ஆய்வில் எச்சரிக்கை

ஐ.ஏ.என்.எஸ்

60 வயது கடந்த பெண்கள் குறிப்பாக மாதவிடாய் முடிந்த பெண்கள் அல்லது கருப்பை அகற்றப்பட்ட பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் ஒரு பெரும் பிரச்சினையாகும்.

இதற்காக இவர்கள் கால்சியம் மற்றும் வைட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக் கொண்டு எலும்பு முறிவு வாய்ப்புகளை குறைக்கின்றனர். ஆனால் கால்சியம் மாத்திரைகள் இவர்களிடத்தில் மாரடைப்பு ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமிருப்பதாக நார்வீஜியன் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக் கழக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

65 வயது பெண்கள் தினப்படி கால்சியம் எடுத்துக் கொள்வதன் மூலம் இடுப்பெலும்பு முறிவு மற்றும் பிற எலும்பு முறிவுகள் பெரும்பாலும் தடுக்கப்பட்டாலும் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.


60 வயது கடந்த சுமார் 1 லட்சம் பெண்களை இதற்காக ஆய்வு செய்துள்ளனர். இதன் ஆய்வு முடிவுகளில் இருதய நோய், ஸ்ட்ரோக் வாய்ப்புகள் கால்சியத்தினால் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக எலும்பு முறிவு சாத்தியம் குறைவாக இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் எலும்பை வலுப்படுத்த கால்சியம், வைட்டமின் டி மாத்திரைகள் எடுத்துக் கொள்வது கூடுதல் ரிஸ்க் என்கிறார் இந்த ஆய்வின் தலைவர் கன்ஹில்டு ஹேகன்.

இதற்கு முந்தைய ஆய்வுகளும் கால்சியத்தின் இருதய நோய் காரணிகளை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

60 வயது கடந்த சுமார் 1 லட்சம் பெண்களில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி காரணமாக 10,000 பெண்களுக்கு இருதய நோய் மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படும் வாய்ப்பு தெரிவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. எனவே எலும்பு முறிவுகளைத் தடுத்து தரமான வாழ்க்கையை உறுதி செய்யும் கால்சியம் வைட்டமின் டி ஆகியவற்றினால் நன்மைகளை விட தீமைகள் அதிகம் என்கிறது இந்த ஆய்வு.

ஆனால் உணவின் மூலம் உட்செல்லும் கால்சியத்தில் இந்த ரிஸ்க் இல்லை என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

முதலில் வைட்டமின் ஈ பற்றியும் இவ்வாறான ஆய்வுகள் தோன்றின, பிறகு பீட்டா கரோடினின் மாரடைப்பு வாய்ப்பு குறித்தும் எச்சரிக்கப்பட்டது.

தற்போது கால்சியம், வைட்டமின் டி இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ரத்தக்குழாய்களில் கால்சியம் சேர்ந்து விடுகிறது. இதனால் ரத்தக்குழாய்கள் இறுக்கமடைகின்றன. இதனால் ரத்த அழுத்தம் கூடுகிறது. நெஞ்சு வலி, மற்றும் மாரடைப்பு ஆகியவை ஏற்படுகின்றன. மேலும் கால்சியம் மாத்திரைகளினால் ரத்தக்குழாய்களில் அது இறுகிய பரு போன்ற ஒரு சிறு கட்டியாகவும் மாறுகிறது. இதனால் ரத்தக்குழாய் குறுகலாகிறது. இதனையடுத்து ரத்தம் செல்வது பெரும் பிரச்சினைக்குள்ளாகி மாரடைப்பு ஏற்படுகிறது. அதேவேளையில் இந்த பரு அளவிலான சிறு கட்டிகள் உடைந்தது என்றால் ஸ்ட்ரோக் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்பதே ஆய்வுகள் தெரிவிக்கும் முடிவாகும்.

பால், யோகர்ட், பச்சைக் காய்கறிகள் உள்ளிட்டவைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இயற்கை கால்சியம் சத்துகளாக எடுத்துக் கொண்டால் இருதய நலம் பாதுகாக்கப்படும் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

Keywords: கால்சியம் மாத்திரைகள், 60 வயது பெண்கள், எலும்புத் தேய்மானம், மாரடைப்பு, ஸ்ட்ரோக், ஆரோக்கியம், மருத்துவம், ஆய்வு
நன்றி :
Source:http://tamil.thehindu.com/

No comments: