Saturday, December 27, 2014

ஜி.எஸ்.டி வரி # வரி வரியாய் பொறுமையாய் படிக்கவும்

நாட்டுல இருக்குற வரியெல்லாம் பத்தாதுன்னு இதென்னப்பா புதுசா ஜிஎஸ்டி வரி? பயப்பட வேண்டாம். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சில வரிகளை விதிக்கும் முறையை மாற்றி அமைக்கப்பட்ட வடிவம்தான் ஜிஎஸ்டி வரி.

எதுனா பொருள் வாங்கும்போது அதோட பேக்கிங் அட்டையில் எம்.ஆர்.பி ( maximum retail price ) என்று குறிப்பிட்டு அந்தப் பொருளின் விலை எழுதப்பட்டு இருக்கும். அதாவது அனைத்து வரிகளும் உட்பட அந்தப் பொருளின் விலை என்று அர்த்தம்.
ஆனால் விற்பனை வரி என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறு படுவதால் தமிழகத்தில் வாங்கும் கோல்கேட் பேஸ்டின் விலை ஆந்திராவில் சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். இன்னும் புரியுற மாதிரி சொல்றதுன்னா தமிழ்நாட்டைவிட பாண்டிச்சேரியில் உங்கள் அபிமான பொருள் விலை மலிவாகக் கிடைக்கும் காரணம் அதுதான்.

ஆனால் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் இனி இந்தியா எங்கும் ஒரே வரிவிகிதம் செயல்படுத்தப்பட்டு இனி அனைத்து மாநிலங்களிலும் ஒரே விலையில் பொருட்கள் கிடைக்கும். சரி இதன் சாதக பாதகங்கள் என்ன?

ஒரு வாட்ச் வாங்குறீங்கன்னு வச்சுக்குவோம். அந்த வாட்சோட சில பார்ட்ஸை ஒரு கம்பெனி உற்பத்தி செய்து வாட்ச்சை முழுமையாக தயாரிக்கும் நிறுவனத்துக்கு விற்கும். விற்கும்போது அந்த மூலப்பொருளை வரியோடு சேர்த்துதான் விற்கும்.

வாட்ச்சை முழுமையாகத் தயாரிக்கும் நிறுவனம்
மொத்த வியாபாரியிடம் விற்கும்போது அதற்கு ஒரு வரிசேர்த்து விற்கும். அவர் ரீடைலரிடம் விற்கும்போது அதற்கு ஒரு வரி சேர்த்து விற்பார். ரீடைலர் நம்மிடம் விற்கும்போதும் ஒரு விற்பனை வரி சேரும். இப்படி பல மட்டங்களில் பொருளின் உண்மை விலையோடு வரிகள் பல சேர்த்துதான் நம் கையில் கிடைக்கும்.

ஆனால் ஜிஎஸ்டி வரி என்பது வாடிக்கையாளரிடம் வரும்போது மட்டுமே விதிக்கப்படும். இதனால் பல்வேறு முனை வரிகள் குறைந்து பொருளின் விலை குறைவாக நமக்குக் கிடைக்கும்.

நாடு முழுவதும் பொருட்களை விற்கும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு நடைமுறையைப் பின்பற்றும் தொல்லை ஒழியும். நிர்வாகச் செலவும் பெருமளவில் இதனால் குறையும்.

இப்படி நிர்வாகச் செலவும், வரிகள் குறைப்பு இதனால் பொருட்களின் விலை குறைவதால் நுகர்வோர்கள் வாங்கும் எண்ணிக்கை அதிகரித்து வணிகம் அதிகரிக்கும். எனவே வரும் ஆண்டுகளில் நாட்டின் மொத்த உற்பத்தி விகிதம் ( ஜிடிபி) 2 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம்னும் சொல்றாங்க.

ஆனால் பிரச்சனை என்னன்னா ஜிஎஸ்டி நுகர்வோர்களிடம் இருந்து மட்டுமே வசூலிக்கப்படுவதால் எந்த மாநிலம் அதிகம் செலவு செய்யுதோ அங்குதான் அதிக வரி கிடைக்கும். தமிழகம், மகாராஷ்டிரம்,குஜராத் போன்ற உற்பத்தி மிகுந்த மாநிலங்களுக்கு வரி அதிகம் கிட்டாது. ஜிஎஸ்டியில் ஒரு பங்கு மத்திய அரசுக்கு இன்னொரு பங்கு மாநிலத்திற்கு. இந்த சிக்கலின் போக்கு எப்படி இருக்கும் என்பது நடைமுறைக்கு வந்த பிறகே தெரியும்.

ஆனால் எந்த வரிவிகிதமானாலும் கழடுவது என்னவோ நமது டவுசர்தான் என்பதைத் தெரிந்து கொள்ள எவரும் எந்தப் பொருளாதார சித்தாந்தமும் படிக்க வேண்டிய அவசியமே இல்லை

ஆக்கம் M.m. Abdulla

No comments: