Sunday, October 26, 2014

ஆசை....! சுமைகள்....!

ஆசை....!

கடலலையில் கலந்து
கரையைத் தொட்டுவிட ஆசை....

காற்றில் மிதந்து
மேகத்தை தொட்டுவிட ஆசை....

நதியில் நீந்தி
கடலில் கலந்துவிட ஆசை....

மழையில் நடந்து
முழுவதும் நனைந்து விட ஆசை....

அன்பைப் பகிர்ந்து
நட்புகளில் நிலைத்துவிட ஆசை....

ஏகஇறையை வணங்கி
அவனருளில் அடங்கிவிட ஆசை...
 
சுமைகள்....!

கல்வியும் ஒரு சுமைதான்
பணத்திற்காக விற்கப்படும்போது
வேலையும் ஒரு சுமைதான்
விருப்பம் இல்லாது செய்யும்போது

வாழ்வும் ஒரு சுமைதான்
இலக்கின்றி வழி நடக்கும்போது
பயணமும் ஒரு சுமைதான்
சேருமிடம் தெரியாதபோது

உணவும் ஒரு சுமைதான்
பசி இல்லாதபோது
செல்வமும் ஒரு சுமைதான்
ஈகை குணம் இல்லாதபோது

உடலும் ஒரு சுமைதான்
ஆரோக்கியம் இல்லாதபோது
உயிரும் ஒரு சுமைதான்
ஏகன் இறையோனை வணங்காதபோது.

கவிதை ஆக்கம் :
 
ராஜா வாவுபிள்ளை

No comments: