Wednesday, July 23, 2014

போர் வெறுப்போம்

காட்டுமிராண்டித் தனம்
அநாகரிகத்தின் உச்சம்
மனிதன்
பரிணாம வளர்ச்சியே
பெறவில்லை
என்ற அறிவிப்பு
போர்

*

கண்காணாத தேசத்தில் விளைந்த
ஆப்பிள்
என் ரத்தமாகிறது

என் காலடி மண்ணில் விளைந்த
நெல்
எங்கோ ஒரு தூர தேசத்தவனுக்கு
ரத்தமாகிறது

இதில் என் மண் என்பது எது
*
சுயநலத்தின் நரம்புகளாய்
உலகில்
எல்லைக் கோடுகள்

*

தாய்மண் என்பது
போரெனத் திரிந்தால்
அது மயானம்

தாய்
புதைக்கப்பட்டுவிடுகிறாள்

இரத்தம் தந்து
வளர்த்தெடுத்த தாய்மண்
ரத்தம் கேட்கும்
பிசாசாகிவிடுகிறது

*

மனிதன்
மிருகமானால்
அவன் பெயர் போர்வீரன்

அமைதி காக்கப்
போரிட வந்தவனுக்குப்
பெண் வெறி
எங்கிருந்து வந்தது

நாடு காக்கப் போரிடும்
அவனுக்கு
சதை தின்ன
எப்படித் தோன்றிற்று

வாழும்போது
எவையெலாம் ஒழுக்கமோ
அவையே
முதலில் கொல்லப்படுகின்றன
போரிடும்போது

அநீதிகளில்
விளையும் நீதியும்
அநீதிதான்

*

ஒவ்வொரு யுத்தத்திலும்
பெண்கள்
ஏன்
பிழிந்தெடுக்கப் படுகிறார்கள்

போரை
வெறுப்போம்
போர் வீரனை
மறுப்போம்

இயலாதோரைப்
போருக்குத் தூண்டும் இழிஞர்கள்
அழிக்கப்படல் வேண்டும்

மனிதனிலிருக்கும்
தெய்வத்தை
மனிதனில் இருக்கும்
மிருகம்
கொன்று தின்னும் காட்சிதான்
போர்வீரன்

*

மொழிவெறி
மதவெறி
இனவெறி
நிலவெறி
என்று
எதுவானாலும்
அது
வெறிதான்

போர் வெறுப்போம்
போர் வீரன் கொல்வோம்
மனிதர்களாய் வாழ்வோம்
அன்புடன் புகாரி
நன்றி : http://anbudanbuhari.blogspot.in/

1 comment:

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

போரில் இரு வகையுண்டு ஒன்று ஆக்ரமிப்புக்காக மற்றொன்று தர்க்காப்புக்காக தன் உடைமையை தர்க்காத்துக்கொள்ள போரிட்டு மடிந்தால் அது சஹீதுடைய மரணம் ஆகும்