Tuesday, July 30, 2019

*கல்யாணமாம் கல்யாணம்* ஊரலசி உறவலசி / ஆடியோ வீடியோவுடன்


ஒருவழியாகத் திருமணமும் முடிந்து ஓரிரு வருடங்கள் கழித்து நான் என் திருமணத்தை நினைத்து அதன் கதையை இப்படி ஒரு கவிதையாய் எழுதினேன். அந்தக் கவிதைதான் இது:
அன்புடன் புகாரி

*கல்யாணமாம் கல்யாணம்*
ஊரலசி உறவலசி
      உண்மையான நட்பலசி
பாரலசிப் பார்த்துவொரு
      பசுங்கிளியக் கண்டெடுத்து

வேரலசி விழுதலசி
      வெளியெங்கும் கேட்டலசி
ஆறேழு உறவோடு
      அணிவகுப்பார் பெண்பார்க்க


மூடிவச்ச முக்காடு
      முழுநிலவோ தெரியாது
தேடிவந்த ஆண்விழிக்கு
      தரிசனமும் கிடையாது

ஆடியோடி நிக்கயிலே
      ஆளரவம் காட்டாமல்
ஓடிப்போய் பாத்தாலோ
      உதைபடவும் வழியுண்டு

பாத்துவந்த பெரியம்மா
      பழகிவந்த தங்கச்சி
நூத்தியொரு முறைகேட்டா
      நல்லழகுப் பெண்ணென்பார்

ஆத்தோரம் அல்லாடும்
      அலைபோல தவிச்சாலும்
மூத்தவங்க முடிவெடுத்தா
      முடியாது மாத்திவைக்க

நாளெல்லாம் பேசிடுவார்
      நாளொன்றும் குறித்திடுவார்
தோளோடு தோள்சேர
      பரிசந்தான் போட்டிடுவார்

ஆளுக்கொரு மோதிரமாய்
      அச்சாரம் அரங்கேறும்
மூளும்பகை வந்தாலும்
       மாறாது வாக்குத்தரம்

முதல்நாள் மருதாணி
       முகங்கள் மத்தாப்ப்பு
பதமாய் அரைத்தெடுத்த
      பச்சையிலைத் தேனமுதை

இதமாய்க் கைகளிலே
      இடுவார் இருவருக்கும்
உதடுகள் ஊற்றெடுக்க
      ஊட்டுவார் சர்க்கரையை

மணநாள் மலருகையில்
      மாப்பிளை ஊர்வலந்தான்
குணமகள் வீடுநோக்கி
      மணமகன் செல்லுகையில்

அனைவரும் வாழ்த்திடுவர்
      அகங்களில் பூத்திடுவர்
புதுமணப் பெண்ணவளோ
      புரையேறித் சிரித்திடுவாள்

வட்ட நிலவெடுத்து
      வடுக்கள் அகற்றிவிட்டு
இட்ட மேடைதனில்
      இளமுகில் பாய்போட்டு

மொட்டு மல்லிமலர்
      மொத்தமாய் அள்ளிவந்து
கொட்டி அலங்கரித்தக்
      குளுகுளுப் பந்தலிலே

சுற்றிலும் பெரியவர்கள்
      சொந்தங்கள் நண்பர்கள்
சிற்றோடை சலசலப்பு
      செவியோரம் கூத்தாட

வற்றாத புன்னகையும்
      வழிந்தோடும் பெருமிதமும்
உற்றாரின் மத்தியிலே
      உட்கார்வார் மாப்பிள்ளை

உண்பதை வாய்மறுக்க
       உறக்கத்தை விழிமறுக்க
எண்சான் உடலினுள்ளே
       எல்லாமும் துடிதுடிக்க

கண்களில் அச்சங்கூட
      கருத்தினை ஆசைமூட
பெண்ணவளும் வேறிடத்தில்
      பொன்னெனச் சிவந்திருக்க

சின்னக் கரம்பற்றச்
      சம்மதமா மணமகனே
மன்னன் கரம்பிடிக்க
      மறுப்புண்டோ மணமகளே

என்றே இருவரையும்
     எல்லோரும் அறியும்படி
நன்றாய்க் கேட்டிடுவார்
     நடுவரான பெரியவரும்

சம்மதம் சம்மதமென
     சிலிர்த்தச் சிறுகுரலில்
ஒப்புதல் தந்துவிட்டு
      ஊரேட்டில் ஒப்பமிட

முக்கியப் பெரியோரும்
      முன்வந்து சாட்சியிட
அப்போதே அறிவிப்பார்
      தம்பதிகள் இவரென்று

சந்தோசம் விண்முட்டும்
      சொந்தங்கள் இனிப்பூட்டும்
வந்தாடும் வசந்தங்கள்
      வாழ்த்துக்கள் கூறிநிற்கும்

முந்தானை எடுத்துமெல்ல
      முந்திவரும் கண்ணீரைச்
சிந்தாமல் துடைத்துவிட்டு
      சிரிப்பாளே பெண்ணின்தாய்

அன்புடன் புகாரி

No comments: