
அன்புடன் புகாரி
மணமகன், என் மகன் சுகைல் 15 வயதானபோது எழுதியது
கொடைமிளகாய்க் கண்ணழகா
கொத்தவரும் மூக்கழகா
விடைசொல்லாச் சிரிப்பழகா
ஊசிவெடிப் பேச்சழகா
தொடைமீறும் நடையழகா
தொட்டழியா ஆணழகா
எடையில்லா இடுப்பழகா
எஃகிரும்புத் தோளழகா
மீசைவரும் மணியோசை
மேலுதட்டில் கேட்குதடா
ஓசையில்லாச் சொல்நூறு
உதட்டோரம் ஏங்குதடா
ஆசைகொட்டிப் பேசயிலே
அடிவயிறு ஊறுதடா
மேசையிலே பூங்கொத்தா
மனசெல்லாம் நிறையுதடா
சின்னஞ்சிறு விரலெடுத்து
சிக்கெடுக்க வருகின்றாய்
இன்னுமின்னும் வேண்டுமென்று
இனிப்பள்ளித் தூவுகிறாய்
எண்ணயெண்ண இனிக்குதடா
இதயவெளி மணக்குதடா
தின்னத்தினம் திகட்டாத
திங்கள்முகம் யோகமடா
விழுதாடும் ஆலமரம்
தானூஞ்சல் ஆடுதடா
உழுதநில எழிலான
உன்னழகைக் கொஞ்சுதடா
நழுவிவிழும் விழித்துளிகள்
நன்றிமழை கொட்டுதடா
பழுதில்லாப் பிள்ளைபெற
புண்ணியமோ கோடியடா

No comments:
Post a Comment