Saturday, June 1, 2019

#லைலத்துல்_கத்ர் ...#இறுதிப்_பாகம் #குகைக்குள்_இறங்கிய_குர்ஆன் அபு ஹாஷிமா


#இறைவனே_ஆசிரியன்

விந்தை புரிய வந்த
வித்தகனின் தூதரவர்
மென்னகைப் புரிந்தார்
வார்த்தையொன்றை உதிர்த்தார் !

" ஓதுவீராக "
வேதத்தின் முதல் வரியை
வேதம் கொடுத்த முதல்வனின்
ஒளித் தூதர் ஜிப்ரீல்
உலகத்தில்
முதன் முதலாக
அண்ணலுக்கு உபதேசித்தார் !

ஜிப்ரீலின்
அருள் வார்த்தை
ஒளியாக உருவெடுத்து
உத்தமரின் உள்ளத்தில்
ஊடுருவியது !


உலர்ந்துபோன
அண்ணலின் உதடுகள்
உதறலை உதறி விட்டு
உறுதியை
உறுதி செய்து கொண்டன !

" நான் ஓதத் தெரியாதவன் "என்ற
உண்மையின் வார்த்தைகளை உரைத்தன !

ஒளி உருவம்
உண்மையின் பக்கம் வந்தது !
அள்ளி அணைத்தது !
" ஓதுவீராக "
மீண்டும் உரைத்தது !

உண்மையே உரைக்க வந்த
உத்தமரின் உதடுகள்
மீண்டும் உரைத்தன
" நான் ஓதியவனல்லேன் "

ஒளியுரு மீண்டும் ஒருமுறை
தன்னிலும் மேலான ஒளியை
அணைத்தது !
" ஓதுவீராக " எனும்
வார்த்தை முத்துக்களை
உதிர்த்தது !

எத்தனை முறை உரைத்தாலும்
உடலோடு
கட்டி அணைத்தாலும்
உண்மையே உரைக்க வந்த
உத்தமரின் உதடுகள்
இப்போது
உருக்கமாய் கேட்டது...
" எதை ஓதுவது ?"

ஒளி உருவம்
நெருங்கி வந்தது !
தன்னை
ஒளியென்று தெரிந்து கொள்ளாத
ஒளியின் ஒளியை
ஒளியென்று உணர வைக்க
மீண்டும் ஒருமுறை
வாரி அணைத்தது !
வேத நாயன்
அனுப்பி வைத்த
வேதத்தைச் சொன்னது !

" ஓதுவீராக !
உம்முடைய இறைவனின்
திருப்பெயரைக் கொண்டு
ஓதுவீராக !

இறைவன்
அனைத்தையும் படைத்தவன் !
இரத்தக் கட்டியிலிருந்து
மனிதனைப் படைத்தவன் !

இறைவன்
மிக்க தயாளமானவன் !

எழுதுகோலைக் கொண்டு
மனிதன் அறியாதவற்றை
அவனுக்குக் கற்றுக் கொடுத்தவன் !"

வல்லோன் இறக்கிய
வேத வரிகளை
வள்ளலின் உள்ளம்
உள்வாங்கிக் கொண்டது !
தன் உதட்டுப் பூக்களால்
ஒப்பித்துக் காட்டியது !

அண்ணல் ஓதி முடித்ததும்
ஒளி உருவம்
ஹிராக் குகையிலிருந்து
வெளியே வந்தது !
தன்
சுய உருவை மீண்டும்
அண்ணலின் விழி சேர்த்தது !

#அண்ணல்_ரஸூலானார் ...

பூமிக்கும் வானுக்கும்
உயர்ந்து நின்ற
மா உருவம்
மா மன்னர்
முகம் பார்த்தது !
மா பெரியோன்தந்த
செய்தியைச் சொன்னது !

" முஹம்மதே !
ஏக இறைவனின்
திருத் தூதர் நீங்கள் !
என் பெயர் ஜிப்ரீல் ..
அல்லாஹ்வின் அடிமை !"
எனக் கூறியது !

பரிசுத்த ஆவி
மறைந்து விட்டது !

அன்றுதான்
குர் ஆனின் முதல் பாடத்தை
அதன் ஆசிரியன்
அரங்கேற்றம் செய்தான் !

எழுதத் தெரியாத
படிக்கத் தெரியாத
உம்மி மனிதருக்கு
வான் மறையைப் பாடமாக்கி
முதன் முதலாய் ஓதுவித்தான் !

அகிலங்களைப் படைத்தவன்
அண்ணலைப் படைத்தவன்
வேதங்களைப் படைத்தவன்
தான் வகுத்த வேதத்தின் பாடத்தை
புண்ணியருக்குப் புகட்டி விட்டான் !

ஆதியும் அந்தமும் இல்லா
தனித்தவனின் திருநாமத்தைத் தாங்கி
திருமறையைத் தன்
திருவாயால்
நபிபெருமான்
திறந்து வைத்தார் !

இறைவேதம் இறங்கிய
அந்தப் புண்ணிய
இரவில்தான்
முஹம்மதுக்குப் பட்டமளிப்பு விழா !

அறியாமையை எரித்து
பொய்மையைப் புறந்தள்ளி
ஆன்மாவில் பாடம் எழுதிய
அண்ணல் முஹம்மதுக்கு
அல்லாஹ் வழங்கிய பட்டம் #ரஸூலுல்லாஹ்
" அல்லாஹ்வின் தூதர் "

அண்ணல் முஹம்மது
முஹம்மது ரஸூலுல்லாஹ் ஆனார் !
அல்ஹம்துலில்லாஹ் !

புலர்ந்து வந்தக் கதிரவன்
தன் ஒளியைச் சற்றுக்
குறைத்துக் கொண்டு
இறைவன் அனுப்பி வைத்த
முஹமதெனும் பேரொளியை
முத்தமிட்டு
மரியாதை செய்தது !

தங்கள் வாழ்வுக்கு
விடியல் வந்த செய்தி தெரியாமல்
மக்காவின் மனிதர்கள்
விடிந்த பின்னும்
முடியாத உறக்கத்தில்
விழுந்து கிடந்தார்கள் !

பெருமான் ரஸூலுல்லாஹ்
தங்கள் இல்லம் நோக்கி
விரைந்து நடந்தார்கள் !

அபு ஹாஷிமா
--------------------------------------------


No comments: