Monday, June 24, 2019

எனக்குப்பிடித்த பாடல்கள் 5 / வே.நடனசபாபதி

எனக்குப்பிடித்த பாடல்கள் 5
உருவத்தை வைத்து ஒருவரை எடை போடலாமா?

உருவத்தில் சிறியதாய் இருப்பவர்கள் என்றால் நம்மில் பலருக்கு ஏளனம்தான். அவர்களைப்பற்றி நம்மிடையே தான் எத்தனைவழக்குச்சொற்கள்!

'கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே'
குள்ளனைக்கொண்டு ஆழம் பார்.
போன்றவை பல உண்டு.


ஆனால் உருவத்தில் சிறியவர்கள் உண்மையில் புத்திசாலிகள் என்பதும் அவர்கள் அசாதாரணமானவர்கள் என்பதும்தான் உண்மை.

அகத்தியர் குள்ளமானவர் தான். ஆனால் அவர் செய்த சாதனைகள் சாதாரணமானவையா?

மன்னன் மகாபலியை மண்ணுக்குள் அனுப்பிய வாமனர் கூட உருவத்தில் சிறியவர் தான்.

தேசிய கவி பாரதி கூட காந்திமதி நாதனுக்கு 'சின்ன பயல்'ஆகத்தானே தெரிந்தார்!

நம்முடைய கிரிக்கட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்றோர்கள் கூட உயரம் குறைந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் தான் மற்றவர்கள் எட்டமுடியாத உயரத்தை எட்டியுள்ளார்கள் என்பதுதானே நிஜம்!

அவ்வளவு ஏன் நாம் கண்டு களிக்கும் சர்க்கஸில் பபூன்களாக வரும் உயரம் குறைந்த அன்பர்கள் செய்யும் சாகசங்கள் மற்ற எல்லாராலும் செய்யமுடியாது என்பதுதான் உண்மை.

உயரத்தில் பெரியவர்களாக இருப்பவர்களோ அல்லது உருவத்தில் பெரியவர்களாக இருப்பவர்களோ செய்ய முடியாததை உருவத்தில் சிறியவர்களாக இருப்பவர்கள் சாதிக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

கடல் பெரியதாக இருந்தாலும் அதனுடைய தண்ணீர் உபயோகமாகாது. ஆனால் அதன் அருகே உள்ள சிறு ஊற்று கூட குடிப்பதற்கான தண்ணீரை தரும் என்பதை ஔவைப்பாட்டி கூட
'கடல்
பெரிது மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்' என்கிறார்.

பனம் பழத்தினுடைய விதை பெரியதாக இருந்தாலும் அதிலிருந்து வரும் மரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்தாலும் நல்ல வெயிலில் ஒருவருக்கு கூட அதன் நிழலில் தங்கமுடியாது. ஆனால் ஆலமரத்தின் பழமும் சிறியது. அதனுடைய விதையும் மீனின் முட்டையினுடைய அளவை விட மிக சிறியதே ஆயினும் அது மரமாக வளர்ந்து தன்னுடைய விழுதுகளின் மூலம் கிளைகளை பரப்பி வளர்ந்து தரும் நிழலில் ஒரு அரசனுடைய நால் வகைப்படைகளும் தங்கமுடியும் என்பதை

தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர் கிருக்க நிழலா காதே.
தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.
அதனால்,
பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்
சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்

என 'வெற்றிவேற்கை' யில் அதிவீரராம பாண்டியர் சொல்கிறார்.
எனவே ஒருவரின் தோற்றத்தை வைத்து எடை போடுவது சரியல்ல.

 வே.நடனசபாபதி

No comments: