Tuesday, July 23, 2013

சுவர்களல்ல அறைகளல்ல

வசிப்போரின்
கூட்டுயிரே வீடு

ஒருவருக்குள் ஒருவரென்று
பூவிதழ்போல்
பூத்திருக்கும் வீடு

அன்பளித்து வம்பொழித்து
அரவணைப்பில்
வாழ்ந்திருக்கும் வீடு

கண்ணசைத்துப் புன்னகைத்து
நிம்மதிக்குள்
ஒளிர்ந்திருக்கும் வீடு

மூடமன இருள்விலக்கி
முழுநிலவாய்
அறிவிலாளும் வீடு

வாடிவந்த எளியவர்க்கு
வளரமுத
விருந்தூட்டும் வீடு

துயரறிந்து விழிகசிந்து
அயலவர்க்கும்
அன்புதரும் வீடு

பகைவருக்கும் முகமளித்து
வருகவென்று
மனம்திறக்கும் வீடு

யாருக்கும் நிழலாகும்
எந்நாளும்
ஒளிவீசும் வீடு

ஊருக்கு வளம்சேர்க்கும்
உலகுக்கே
சான்றாகும் வீடு

பேருக்கு வாழாமல்
புத்தகமாய்
வாழுமிந்த வீடு

பூட்டுக்குள் பலியான
வீட்டுக்கும்
சாவியாகும் வீடு

Source : http://anbudanbuhari.blogspot.in/

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு வரியும் சிறப்பு... வாழ்த்துக்கள் ஐயா... (புகாரி அவர்களுக்கும்)