எப்போதும் என்மீது செல்லமாகவே இருக்கும் அப்பாவின் கையால் அடிவாங்கிய இரவு அது. அடித்தது வலிக்கவில்லை. அடித்து விட்டாரே எனும் எண்ணம் தான் வலித்துக் கொண்டிருந்தது.
எனக்கு அப்போது ஐந்து வயதோ, ஆறு வயதோ இருக்கலாம். ஒழுங்காக டவுசர் உடுக்கத் தெரியாத வயது. ஆனாலும் அந்த வலியை மனதுக்குள் கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகும் மீண்டெடுக்க முடிகிறது.
தூங்காமல் கண்ணை மூடியபடி படுத்துக் கிடந்த எனக்குள் சின்ன வயது சிந்தனைகள் நிரம்பின. “அப்பாவுக்கு என் மேல பாசமே இல்லை. இல்லேன்னா இப்படி அடிச்சிருப்பாரா?” என்பதே எனது மனசில் எழுந்து கொண்டிருந்த ஒரே கேள்வியாய் இருந்தது. அந்தக் கேள்வி எனக்குள் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்ததால் என்னால் தூங்கமுடியவில்லை.
