
பிரபஞ்சத்தை உருவாக்க கடவுள் தேவையில்லை என்கிறாரே ஸ்டீபன்ஹாகின்ஸ்? - மருதை குமார், கடலூர்
ஸ்டீபன் ஹாகின்ஸ் தன்பங்குக்கு ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கிவிட்டு சொன்னால் நல்லது. 
மெக்சிகோ வளைகுடா எண்ணை கசிவு தற்போதைய கதி என்ன? - கோபால்
அமெரிக்க ராணுவ ரசசியங்கள் விக்கிலீக்ஸ் மூலம் 'கசிந்த' செய்தி வெளியான பிறகு மெக்சிகோ எண்ணைக் கசிவு பழைய செய்தியாகி விட்டது. கடந்த ஏப்ரல் மாதம் மெக்ஸிகோ வளைகுடாவில், எண்ணெய்க் குழாயில் அடைபட்டிருந்த இயற்கை வாயுவினால் எண்ணெய் உறிந்து எடுக்கும் தளம் சேதமடைந்தது. எண்ணெய்க் குழாயிலிருந்து வெளியேறிய மீதேன் வாயு தீப்பற்றியதால் ஏற்பட்ட விபத்தில் 11 ஊழியர்கள் இறந்தனர். எண்ணெய்க் கிணறும் வெடித்ததால் கடலில் எண்ணெய் பரவி விட்டது. இதனால் கடல்வாழ் உயிரினங்களும் தாவரங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டன.கடலோர மக்களும் கடல்சார் தொழில் செய்வோரும் பாதிக்கப்பட்டனர்.அவர்கள் எண்ணெய் நிறுவனமான பி . பி . நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்கள் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுக்கும் உரிமையை விட்டுக் கொடுக்காமல், 20 பில்லியன் அமெரிக்க டாலருக்குக் குறையாமல் இடைக்கால நிவாரணம் பெறுவது என்பதே தற்போதைய நிலை.இடைக்கால நிவாரணம் பெறுவதற்காக சுமார் நான்கு லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகத் தெரிகிறது.
தீயணைப்புத் துறையில் பெண்கள் ஏன் பணியாற்றுவதில்லை? -கார்த்திக் - தூத்துக்குடி
இந்தியாவில்தான் இல்லை. காவல் துறையிலும் இப்போது ராணுவத்திலும் பெண்கள் சேவை செய்வதுபோல் விரைவில் தீயணைப்புத் துறையிலும் பெண்கள் சேவையாற்ற்வர். அது தேவையும் கூட.
மற்ற வாகனங்களைப்போல் நடுக்கடலில் கப்பல்கள் மோதிக் கொண்டு விபத்து ஏற்படுவது கொஞ்சம் ஓவர்தானே? - சந்திரன்
'விபத்து' என்பதே எதிர்பாராமல் நடப்பது தானே? எல்லா விபத்துகளுமே 'ஓவர்'தான். எதுவுமே இயல்பில்லை.

ஒபாமாவின் இந்திய விஜயம் குறித்து வ.மு.வின் கருத்து? - ரவி, அட்லாண்டா
அமெரிக்காவுக்கு லாபம் தேடித்தரும் வணிகப்பயணம் அதன் நோக்கத்தில் வெற்றி பெற்று விட்டது.
ஒபாமாவுக்காக, ஒருசிலநாள் நிகழ்ச்சிகளுக்காக, இத்தனை கோடி செலவுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா? - ஜான்சன் செபாஸ்டியன்
அமெரிக்காவின் அதிபரின் பாதுகாப்புக்காக அந்நாடு செலவிட்ட தொகையால் நமக்கென்ன இழப்பு?
"சங்கரராமன் கொலைவழக்கில் மேலும் சில சாட்சிகள் பல்டி" எனத் தலைப்பிட்டு செய்தி வருகிறது. சாட்சி, முதலில் சொன்னது அல்லது பின்னர் சொல்வது ஆகிய இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க வேண்டும். அல்லது இரண்டுமே பொய்யாக இருக்க வேண்டும். இது நீதிமன்றத்தில் பணியாற்றும் துப்புறவுத் தொழிலாளிக்கும் தெரியும். இவ்வாறு பிறழ் சாட்சி சொல்பவர்களைக் கடுமையாக தண்டிக்க நம் சட்டத்தில் இடம் உண்டா? - வசீகரன், பட்டுக்கோட்டை
உண்டு. சாட்சியத்தை மாற்றியதற்காகக் குஜராத் பெஸ்ட்பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஜகீரா ஷேக் குஜராத் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
காஷ்மீரிகளைக் கொன்று நிலத்திற்காக சண்டை போடுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? - அப்துல் ரஹ்மான்
இன்று காஷ்மீரில் நடப்பது நிலத்திற்கான சண்டை இல்லை. காஷ்மீரிகளை அங்கிருந்து விரட்டும் திட்டமும் இந்தியாவிற்கு இல்லை. இந்தியாவின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்டு இந்தியர்களாக வாழ விரும்பாதவர்கள் நடத்தும் போராட்டத்தை அடக்குவதற்காக அங்கு குவிக்கப்பட்டிருக்கும் ராணுவமும் துணை ராணுவப் படைகளும் செய்யும் அட்டூழியங்களை எதிர்க்கும் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
ஒரே மாதிரியான வினாக்களுக்கு விடையளிக்க நேரும்போது என்ன நினைப்பீர்கள் வ.மு ஐயா - சண்முகம், சேத்தியாத்தோப்பு
புதிது புதிதாக வாசகர்கள் வருவதால் முன்னர் இதுபோன்ற வினாக்களுக்கு அளித்த விடைகளை அவர்கள் படித்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்துக் கொள்வதால் அவ்வினாக் களுக்குச் சிறிய விடையளித்து, முன்னர் அளித்துள்ள விடைகள் பற்றியும் குறிப்பிட்டு விடுவேன்.