Showing posts with label ஆனந்தக் கண்ணீர். Show all posts
Showing posts with label ஆனந்தக் கண்ணீர். Show all posts

Wednesday, May 9, 2012

நான் திருமணம் செய்து வையுங்கள் என்று உங்களைக் கேட்டேனா?

   நான் இந்த உலகத்திற்கு வந்தது இறைவன் அருளால் உங்கள் மூலமாக, நான் உங்கள் விருப்பத்திற்கு மாறாக உருவாக்கப்பட்டேனா அல்லது விருப்பத்தின் காரணமாக உருவானேனா  என்பது நான் அறியேன், ஆனால் நீங்கள் நான் உலகில் வந்து விழுந்ததிலிருந்து என்னை அழிக்க முயலாமல் பாசம் காட்டி வளர்த்தது மட்டும் உண்மை என்பதனை நான் அறிவேன். நீங்கள் இருவரும் எனக்காக  செய்த தியாகங்களை மறக்க முடியுமா!

   அம்மா, நான் பிறந்த போது உன்னைத்தான்  முதலில் பார்த்தேன் அந்த 'அம்மா' என்ற தமிழ்  வார்த்தையை நீ சொல்லிக்  கொடுக்காமல் உன்னை 'ம்மா'  'அம்மா' என்று  அழைக்க இறைவன் சொல்லித் தந்துவிட்டான். நான் பிறந்தபோது  உங்கள் கண்களில் விழுந்தோடிய ஆனந்தக் கண்ணீர் மகிழ்வானது . அது காலமும் நிலைத்து எனது வாழ்வை செம்மை படுத்த நீங்கள் மேற் கொண்ட முயற்சி உயர்வானது.

  அந்த உங்களது ஆனந்த கண்ணீரும், மகிழ்வும்  இப்பொழுது குறைந்து  வந்தாலும் அதனை நீங்கள் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருப்பதனை நான் அறிகின்றேன். இது யார் செய்த குற்றம்! நிச்சயமாக நான் இல்லை. நான் திருமணம் செய்து வையுங்கள் என்று   உங்களைக் கேட்டேனா? நீங்கள்தான் எனக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினீர்கள். உங்கள் விருப்பப் படியே நீங்கள் பார்த்த பெண்ணையே திருமணமும் செய்து வைத்தீர்கள். இப்பொழுது உங்களுக்கும் என் மனைவியுமான  உங்கள் மருமகளுக்கும் கருத்து வேறுபாடு வந்து உங்கள் மகிழ்வில் குறைவு வந்து விட்டதனை நான் அறிகின்றேன். பெற்றோர்களே சிறுது பொறுமையை கடைப்பிடியுங்கள்,  உங்கள் மகிழ்வுக்கு ஒரு வழி கண்டுபிடித்து விட்டேன். உங்களுக்காகவே நாங்கள் உங்களுக்கு பேரக் குழந்தையை பெற்று தருகின்றோம். அது போதும் உங்கள் மகிழ்வின் தொடர்ச்சிக்கு. நீங்களும் குழந்தையோடு குழந்தையாக மாறிவிடுவீர்கள். குழந்தை மனது குறை காணாத மனது,அதனால் இழந்த மகிழ்வு தங்களை வந்தடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.  .