Monday, April 1, 2019

எதையும் தாங்கும் இதயம்


சந்தவசம்தம் இணையக் குழுமத்தில் ஒரு கவிப்பட்டிமன்றம் நடத்தப்பட்டது. வாழ்க்கைக்குத் தேவை  எது? நல்ல நண்பர்கள், உழைப்பு, அனுபவம், அறிவு, முகத்துதி, பிறர் உதவி, நெஞ்சுறுதி, தன்னம்பிக்கை, விடா முயற்சி, எதையும் தாங்கும் இதயம் என்று பத்துத் தலைப்புகள் பத்துக் கவிஞர்களுக்கு வழங்கப்பட்டன. அத்தனைத் தலைப்புகளுமே அபாரம். எதைப் பாடி எவர் வெல்வார் என்பது மிகக் கடுமையானதாக இருந்தது. எனக்குக் கிடைத்த தலைப்போ ’எதையும் தாங்கும் இதயம்’. கிடைத்ததும் பெரிதும் மகிழ்ந்தேன். அப்படி மகிழ்ந்து எழுதிய பட்டிமன்றக் கவிதையே இது.

நல்ல நண்பர்கள் என்பது
கற்பனையின் உச்சம்
வாழும் காலம் தராத கனவு முத்தம்


உழைப்பென்பதோ
தேகநலத்தின் பிள்ளை
அள்ளியணைக்கும் ஆவலோடு
ஓடித்திரிந்தாலும்
கைக்கெட்டாமல் கண்ணாமூச்சு ஆடும்
அதிர்ஷ்டம்
பொற்கலை விரல்களால்
புழுதிக் கணக்கெழுத நேரும்
அவலச் சுவடு

அனுபவம் எப்போதும்
நிகழ்த்திய தவறைச்
சுட்டிக்காட்டும் வெட்டி விரல்கள்
முற்றும் முடிந்துபோனபின்
மூலையில் உட்கார்ந்து
அச்சச்சோ என்று உச்சுக்கொட்டவைக்கும்
குற்றப் பத்திரிகை

அறிவென்பதோ
அரைகுறைச் சொத்து
அகங்கார ஆட்டம்போடும்
ஏட்டுச் சுரைக்காய்
இதய நிறுத்தங்களால்
நிராகரிக்கப்படும் பேருந்து

முகத்துதி என்பது
வஞ்ச வார்த்தை லஞ்சம்
மனித இனத்தின் மகா வெட்கக்கேடு

பிறர் உதவி என்பதோ
பிச்சைதானே உண்மையில்
இந்த யாசகப் பாத்திரமும்
ஒட்டடைகளால் நிரம்பிக்கிடப்பதே
இந்நாள் நடைமுறையன்றோ

நெஞ்சுறுதி என்றால் என்ன
பலகீன இதயத்தில் உதிக்கும் சூரியனா?

தன்னம்பிக்கை
எப்போது பூத்துக்குலுங்கும்
நடுங்கும் இதயத்தின் ஒப்பாரி கேட்டா?

விடாமுயற்சி என்பதோ
விண்ணளக்கும்
ஒளிந்தோடும் இதயத்தின்
முக்கல் முனகல்களிலா?

அடடா... இப்போது
விடை மிகவும் சுலபமாயிற்றே
வெற்றி எனக்கும் நிச்சயமாயிற்றே!

ஆமாம் ஆமாம் பட்டிமன்றமே
உனக்கும் எனக்கும் இப்போது
பட்டென்று விடை சொல்வது
சுலபம் சுலபம் மிகமிகச் சுலபம்!

0

தீண்டும் தீண்டும் துயரம்
தினம் தோண்டத் தோண்ட உயரும்
வேண்டும் வேண்டும் உதயம்
அது எதையும் தாங்கும் இதயம்

0

வெந்துபோன சோற்றுக்குள்
வேகாத அரிசிகளாய்
விடைதேடி விடைதேடி
விடைகாணா மயக்கமா?

தெரிந்தவோர் விடைகூட
பச்சோந்தித் தோல்போல
நேற்றுவோர் முகமாகி
இன்றுவோர் நிறமானதா?

தேய்கிறதா மணித்தோழா
துயிலாத உயிர்க்குஞ்சு
விலகாத கதவின்முன்
விரல்கூட்டித் தினந்தட்டி?

நண்பர்களே பகைவரெனில்
பகைவர்தாம் நண்பர்களோ
இருட்டுகளின் தத்துவங்கள்
உறக்கத்தை மேய்கிறதா?

ஒளிந்திருக்கும் இருட்காட்டில்
விகாரத்தின் எச்சங்கள்
உனக்குள்ளும் நஞ்சென்ற
நிசங்காட்டிச் சுடுகிறதா?

நிசமென்று வந்ததெலாம்
நிழல்தானோ முழுப்பொய்யோ
தொப்புள்கொடி அறுத்தெறிந்த
அப்பொழுதே தாய்பொய்யோ?

காலத்தின் சுழற்சிகளில்
அனுபவத்தின் ஆய்வுகளில்
கண்டஞானக் கீற்றின்முன்
நீயுந்தான் ஓர்பொய்யோ?

அய்யய்யோ நடுக்கங்கள்
அசராத தண்டனைகள்
இடுகாட்டுத் தீப்பொறியாய்த்
தளிருயிரைத் தீய்க்கிறதா?


துயர்வேண்டாம் உயிர்த்தோழா
தீய்க்கட்டும் தீருமட்டும்
தெரிந்துகொள் புரிந்துகொள்
தெளிவாய்ஓர் பேரூண்மை! 

இன்றுதான்உன் வாழ்வமுதின்
இனிப்பான சுகப்பயணம்
உண்மையான பொற்தளத்தில்
உயிர்ச்சுவடு பதிக்கிறது!

முட்டையிருள் ஓடுடைக்கக்
குட்டிகளும் அழுமோடா
முட்டியதை உடைத்தெறிந்து
முளைவிட்டு வெளியில்வா!

சத்தியங்கள் அனைத்தும்நீ
சந்தித்துத் தெளியாமல்
வாழ்வென்னும் வெண்குதிரை
விவரமுடன் ஓடுமோடா!

துயரங்கள் பெருக்கெடுக்க
துக்கத்தின் கணக்கெடுத்தாய்
இன்பங்கள் வேண்டுமெனில்
இருபுறமும் அலசிப்பார்!

வரவுகளும் செலவுகளும்
வாழ்வென்னும் நியதியடா
வரப்போகும் இன்பமினி
வந்தவற்றை விஞ்சுமடா!

செலவுகளில் சிதையாமல்
சொர்க்கவழி தினந்தேடு
வரவுகளை எதிர்நோக்கி
வலுவாக நீச்சலிடு!

ஓடுடைத்து இம்முறைநீ
உனக்காகப் பிறக்கின்றாய்
வீரனாகப் பிறக்கின்றாய்
விழவில்லை மரணத்துள்!

0

தீண்டும் தீண்டும் துயரம்
தினம் தோண்டத் தோண்ட உயரும்
வேண்டும் வேண்டும் உதயம்
அது எதையும் தாங்கும் இதயம்

கவிஞர் புகாரி
https://anbudanbuhari.blogspot.com/2019/03/blog-post_70.html

No comments: