Monday, April 1, 2019

வாழ்க்கை இனிமையானது


வெறுமனே
காலிப்பாத்திரமாய்
அனுபவ வீணைகளை
மீட்டிப் பார்க்காத
பிஞ்சு விரல் நுனிகளுடன்

காலப் பனிக்கற்கள்
கரைந்த கணங்களில்
என்னில்
தெளிந்த நீரோடையாய்
வாழ்க்கை



0

சிந்தனைத் துளிகள் சொட்டச் சொட்ட
அனுபவ ராகங்கள் கேட்கக் கேட்க
ஞானப்பல் முளைக்க முளைக்க

நிம்மதி செத்துப் போய்
நித்திரை அற்றுப்போய்
விரக்தி ரொம்பிப்போய்

அப்பப்பா
இது என்ன வாழ்க்கை
என்றே கருகினேன்

0

வாழ்க்கை என்ற அரிய பயிர்
கருகியபின் ஓடிவரும்
அழகு நீரோடைதான்
அனுபவமாம்

விரக்தியோடு சொன்னார்கள்
கண்டுணர்ந்தவர்கள்

ஆயினும் என்னைப்
புதுப்பிக்கும் மனத்தோடு
பொறுமையாய்க் காத்திருந்தேன்

கடந்த கணங்களின்
அழுக்குச் சுவடுகளைக்
கழுவிக்கொண்டே நடந்தேன்

முடிந்த துயரத்தின்
இருட்டுப் பிடியிலிருந்து
உயிர்த்தெழும் உர உயிராய்ப்
பூத்தெழுந்தேன்

உச்ச இறுக்கத்தில்
சிக்கிக் கிடந்ததால்
அது வைரம்

தப்புகளும் தவறுகளும்
வாழ்வின் தடங்கள்

அந்த
ஓடுகளை உடைத்துக்கொண்டு
புதிய பிறப்புகள்
மீண்டும் மீண்டும் பூக்கும்

வாழ்க்கை எப்போதும்
வசந்த வரங்களைப்போல
வந்துகொண்டே இருக்கும்

உடல் ஒன்றுதான்
உயிர் பிரியுமுன் வரும்
ஜென்மங்களோ ஆயிரம்

வாசலைத்
திறந்துவைப்போம்
நம்பிக்கை கொண்ட
வாழ்க்கை இனிமையானது

கவிஞர் புகாரி
https://anbudanbuhari.blogspot.com/2019/03/blog-post_54.html

No comments: