Showing posts with label மகிழக் காரணம். Show all posts
Showing posts with label மகிழக் காரணம். Show all posts

Friday, April 15, 2011

மனம் மகிழுங்கள் - 44 : குழந்தை மனம்

44 - குழந்தை மனம்!
- நூருத்தீன்
யற்கையின் மாசுமறுவற்ற மற்றொரு வடிவம் குழந்தை. குழந்தைகளின் பேச்சும் சிரிப்பும் லூட்டியும் தூய்மை. கள்ளம், கபடம் கலக்காதவை. அவர்களுக்கு முன்தீர்மானங்கள் இருப்பதில்லை. இடம், பொருள் பார்த்துப் பேசவேண்டும், கூடாது என்பதெல்லாம் எதுவும் அவர்களுக்கு இல்லை. அதனாலேயே அவர்களின் பேச்சோ சிரிப்போ நமக்குப் பொத்துக்கொண்டு வரும் சிரிப்பையோ சங்கடத்தையோ ஏற்படுத்திவிடும்.

தன் ஐந்து வயது மகளைக் குளிப்பாட்டும்போது தாய் பெருமையோடு கூறினாள், "இங்கே பாரு! உன் தலைமுடி எவ்ளோ நீளமா வளருது".

அதற்கு மகள் முகத்தைச் சிணுங்கலாக வைத்துக்கொண்டு, "நீதான் என் தலைல நெறய்ய தண்ணி ஊத்துற".

அவர்களது உலகம் வேறு. அவர்களின் குறிக்கோள் மிகவும் எளிதானது. மகிழ்வாய் இருக்க வேண்டும். பசித்தால், விழுந்தால், வலித்தால், ஓர் அழுகை. சமாதானம் செய்து கவனித்துக்கொள்ள பெற்றோராச்சு. பிரச்சினை தீர்ந்ததா? அடுத்ததாகத் தூக்கம், விளையாட்டு, சிரிப்பு. பெரியவர்கள் நாம்தான் குழந்தைகளுக்கு algorithm, trigonometry என்று அவர்களுடைய எளிய பாலகத்திலேயே திணித்து, கற்றுத்தந்து, அவர்களது குழந்தைத் தன்மையை விரட்டிவிட்டுத்தான் மறுவேலை என்று அடம் பிடிக்கிறோம். ஓரமாய் அமர்ந்து நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தால், பலன் ஏராளம். சொப்புப் பாத்திரத்தில் உணவு, பானம் எல்லாமும்கூட கிடைக்கலாம். வயிறு நிறையாது; ஆனால் மனம் இலேசாகும்.