
இல்லறம் - துறவறம், எது சிறந்தது? - மாரி, செங்கல்பட்டு.
"இல்லறமல்லது நல்லறமில்லை" எனக் கேள்விப்பட்டதில்லையா?இந்து மதத்தில் தம்பதியராகவே தெய்வங்களைக் கற்பித்துள்ளனர். ரிஷிகளும் முனிவர்களும் அவ்வாறே இருந்துள்ளனர் என நம்பப் படுகிறது.
மற்றுமொரு பெட்ரோல் விலை உயர்வு, இப்படியே போனால் எதில் போய் முடியும்? - மீரான்மைதீன், சென்னை.
"மூக்குள்ளவரை சளி இருக்கும்" அதுபோல பெட்ரோல் இறக்குமதி இருப்பது வரை
விலையும் உயர்ந்துகொண்டே இருக்கும். பெட்ரோலுக்கு மட்டுமா விலையேற்றம்?
நுகர்பொருள் அனைத்தும் நாள்தோறும் விலையேறிக் கொண்டே போவதை நீங்கள்
அறியவில்லையா?
சங்க காலக் குடும்ப அமைப்பிற்கும், தற்கால குடும்ப அமைப்பிற்கும் வேறுபாடு என்ன? - விமலா, மதுரை.
ஒரு விரிவான ஆய்வுக்கட்டுரைக்குரிய தலைப்பை வினாவாக்கியுள்ளீர்கள். விரிவாக எழுத இப்பகுதி இடம் தராது.சங்ககாலக் குடும்ப அமைப்பில் ஆணைச் சார்ந்தே பெண் இருந்தாள்.... களவு கற்பு எனும் இரு நிலையிலும்!
வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் (குறுந்தொகை. 135)
தற்காலத்தில் பெண்களின் நிலை அப்படி இல்லை. சுயமாக வாழும் அளவு பெண்கள் முன்னேறியுள்ளனர்.
"ஈன்று புறந்தருதல் என் தலைக்கடன்" என்றுதான் சங்க கால மகளிர் வாழ்ந்தனர். இன்று குழந்தை வளர்ப்பிலும் அவர்களின் கல்வி மேம்பாட்டிலும் எதிர்கால வடிவமைப்பிலும் தாய்மார்கள் செலுத்தும் அக்கறை அளவிட முடியாதது.
சங்ககால வாழ்வில் சமயம் வாழ்க்கைக்குக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கவில்லை. இக்காலத்தில் சமயங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளில் குடும்ப அமைப்பு உள்ளது.