Showing posts with label நீடூர் சயீது. Show all posts
Showing posts with label நீடூர் சயீது. Show all posts

Tuesday, March 1, 2011

அந்தத் தோற்றம்! உரை லாவகம்! அத்துடன் ..





by டாக்டர் ஹிமானா சையத்
1987 – ல் சுறுசுறுப்பான எழுத்துலகப் பிரவேசம் . 89 -ல் வெளியூர்களிலிருந்து விழாக்களுக்கான அழைப்புகள்! மாவட்டத்துக்குள் மட்டுமே விழாக்களில் கலந்து கொள்ள முடியும் என்ற தொழில்சார்ந்த சூழல்! ஆனால் ஓர் எல்லையில் வெளிமாவட்டங்களுக்கும் சென்றாகவேண்டிய கட்டாயம் நேர்ந்தது. காரணம், விழாவுக்கு அழைத்தவர்கள் சமுதாய முன்னோடித் தலைவர்கள் அல்லது மிக நெருக்கமான வாசகர்கள்.
  சமுதாய விழாக்களில் மறக்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய கூட்டங்கள் கூடுவது தஞ்சை மாவட்டத்து பள்ளிவாசல் திறப்பு விழாக்களில்தான். எனக்குக் கிடைத்த அத்தகைய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் சிந்தனைச் சித்தர் நீடூர் சயீது ஹாஜியார் அவர்கள் என்பதையும், மயிலாடுதுறை மஸ்ஜிதே மஹ்மூதியா திறப்பு விழா அது என்பதையும் ஏற்கனவே ஊற்றுக்கண்ணில் சொல்லியிருந்தேன். அந்த விழாவில் ஊர் திரும்பும்போது ஹாஜியார் மறக்காமல் சொன்ன இன்னொரு விசயம் முக்கியமானது.”அடுத்த முறை நாம் சந்திக்கும் போது உங்களை தாடியுடன் சந்திக்க வேண்டும் ” என்ற வேண்டுகோள்தான் அது.
அதற்கு முன் அது பற்றிய சிந்தனை இருந்ததில்லை என்பதே உண்மை. உண்மையில் அடர்த்தியான தாடி எனக்கில்லை. ” முடி அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும்போது எப்படி தாடி வைப்பது? ” என்று கேட்டேன். உடனே பதிலைத் தயாராய் வைத்திருந்த ஹாஜியார் “அப்படிப் பட்ட தாடியைத்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் மிகவும் ரசித்திருக்கிறார்கள்” என்றார். இன்ஷா அல்லாஹ்” என்று சொல்லிவிட்டு ஊர் திரும்பிவிட்டேன். ஆனால் அதற்கான ஆயத்தம் செய்யவில்லை. அன்றாடம் ஷேவிங் தொடர்ந்தது. மெல்ல மெல்ல ஹாஜியார் அவர்கள் சொன்னதும் மறந்தும் போனது எனலாம்.