சரியாக எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாக என்பது நினைவில்லை. 1999 உலகக்கோப்பை போட்டியாக இருக்கலாம். இந்தியா-பாகிஸ்தான் ஆடும் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. வெற்றி நிலை மாறிக்கொண்டே இருந்தது. அண்ணாசாலை விஜிபி ஷோரூமுக்கு முன்பாக சாலையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தியா தோற்பது போன்ற ஒரு சூழல்.
நடுத்தர வயதுடைய ஒருவர் வெறுப்பாக சொன்னார். “துலுக்கப் பசங்கள்லாம் கொண்டாடுவானுங்க! பாகிஸ்தான் ஜெயிக்கப் போவுது!!” இத்தனைக்கும் அப்போது இந்திய அணிக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தவர் முகம்மது அசாருதீன்.
இறுதியில் வென்றது இந்தியா. சாலை என்று பாராமலும் ‘ஹூர்ரே’ என்று குரலெழுப்பி, ஹைவோல்டேஜ் மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்தவர் கமெண்டு அடித்த நடுத்தர வயதுக்காரர் அல்ல. அவருக்கு அருகில் இருந்த இளைஞர். தலையில் வெள்ளைத் தொப்பி. திருவல்லிக்கேணிகாரராக இருக்கலாம்.
நியாயமான காரணங்கள் ஏதுமின்றி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமியரை இழிவுபடுத்தும் தேசமாக இந்தியா இருக்கிறது. ‘பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும்’ என்று சொல்லக்கூடிய ஒரு இஸ்லாமியரை கூட இதுவரை நான் சந்தித்ததேயில்லை. ஒரு இஸ்லாமியனாக பிறந்திருக்கக் கூடாதா? என்று நான் ஏங்கியிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்தான் அனேகம்.
* - * - * - * - * - *
