Showing posts with label தலைமைத்துவம். Show all posts
Showing posts with label தலைமைத்துவம். Show all posts

Thursday, March 31, 2011

பொறுப்புணர்ச்சி தான் தலைமைத்துவத்தின் அடையாளம்!

by நீடூர் SA மன்சூர் அலி M.A., B.Ed.,
தலைமைத்துவம் (Leadership) என்பதை சுருக்கமாக விளக்கி விட விரும்பினால் அதனை “பொறுப்பு” (Responsibility) என்ற ஒரே சொல்லில் வைத்து விளக்கி விடலாம்! .
ஆமாம், தலைமைத்துவத்தையும் பொறுப்பினையும் நாம் பிரிக்கவே முடியாது!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப் படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் தம் குடி மக்கள் குறித்து விசாரிக்கப் படுவார். குடும்பத்தலைவன் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப் படுவான்.
மனைவி தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளி ஆவாள். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவாள். பணியாள் – தன் எஜமானனின் செல்வத்திற்குப் பொறுப்பாளி ஆவான். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவான். அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள்.(நபி மொழி ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
அபூ பக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் கலீஃபாவாக தேர்ந்து எடுக்கப் பட்ட போது, மதீனாவே மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால் அந்த மகிழ்ச்சியில் இரு சிறுமிகள் மட்டும் பங்கு பெறவில்லை. காரணம், அபூ பக்ர் அவர்கள், தம் வீட்டின் அருகே வாழ்ந்த அந்த சிறுமிகளுக்கு, அவர்களது ஆடுகளிலிருந்து பால் கறந்து கொடுப்பது வழக்கம். அபூ பக்ர் அவர்கள் கலீஃபாவாக தேர்ந்து எடுக்கப் பட்ட போது, அந்த சிறுமிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது அபூ பக்ர் அவர்கள் வழக்கம் போல தங்களுக்குப் பால் கறந்து தருவார்களா – என்பது தான் அந்த சந்தேகம்.
இந்தத் தகவல் அபூ பக்ர் சித்தீக் அவர்களின் காதுகளில் விழுந்தது. உடனே அவர் அந்த சிறுமிகள் இருக்கும் இடம் தேடிச் சென்று சொன்னார்: இறைவன் அருளால் என் பதவி எனது வழக்கமான வேலைகளை மாற்றி விடாது என்று நம்புகிறேன். நான் நிச்சயமாக உங்களது ஆடுகளில் இருந்து பால் கறந்து கொடுக்கும் பணியை தொடருவேன்! அதன் பின்னர் அந்த வழியாக அவர் செல்லும் போதெல்லாம், “உங்கள் ஆடுகளில் பால் கறக்க வேண்டுமா?” என்று கேட்பது வழக்கம்.
இதனைத் தான் நாம் பொறுப்பு என்கிறோம். இந்தப் பொறுப்புணர்ச்சி தான் தலைமைத்துவத்தின் அடையாளம் என்கிறோம்.