- யுவகிருஷ்ணா
திமுக பழைய பாதைக்கு திரும்புகிறது. திமுக ஆரம்பிக்கப்பட்ட காலங்களிலும் சரி. பிற்பாடு வளர்ந்து ஆட்சியைப் பிடித்த காலங்களிலும் சரி. அக்கட்சியின் முக்கியமான பிரச்சார ஆயுதமாக தெருமுனை கூட்டங்கள் அமைந்தன. தொண்ணூறுகளுக்கு பிறகான ஊடக தகவல் தொடர்பு வளர்ச்சியால் கொஞ்சம் கொஞ்சமாக தெருமுனை கூட்டங்களை வெகுஜன இயக்கங்கள் குறைத்துக் கொண்டன. இன்றும் தெருமுனைப் பிரச்சாரத்தை தீவிரமாக கைக்கொண்டிருப்பது கம்யூனிஸ்ட்டு கட்சிகள்தான். தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு சன்டிவி திமுகவுக்கு சரித்திர வெற்றி பெறக்கூடிய வகையில் உதவியது. அதையடுத்து தெருமுனை கூட்டங்களையும், அடிக்கடி நடத்தக்கூடிய பொதுக்கூட்டங்களையும் திமுக குறைத்துக்கொண்டது. இதனால் நேரடியாக அக்கட்சியினர் மக்களை சந்திக்கும் நிலைமை தேர்தலுக்கு தேர்தல் என்று மட்டுமே ஆனது. 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தோல்விக்குப் பிறகு மீண்டும் திமுகவினர் மக்களை சந்திக்க ஆரம்பித்தார்கள். ஊடகங்கள் பெரும்பாலும் திமுகவுக்கு எதிர்நிலையை பல்வேறு காரணங்களால் எடுத்துவிட்ட நிலையில் நேரடிப் பிரச்சாரம் ஒன்றே தங்களை கரைசேர்க்கும் என்பதை கட்சி நிர்வாகிகள் உணர்ந்திருக்கிறார்கள்.