Saturday, August 29, 2009

இந்தியா மற்றொரு சுதந்திரப் போராட்டம் நோக்கி?!

இந்தியா மற்றொரு சுதந்திரப் போராட்டம் நோக்கி?!


Competition - Year 2008

புதன், 27 மே 2009 15:47

சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008-2009 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் ஆண்களுக்கான மூன்றாம் பரிசை வென்ற இக்கட்டுரையை வடித்தளித்த சகோ. எம்.பைஜுர் ஹாதிக்குச் சொந்த ஊர் மயிலாடுதுறையை அடுத்த நீடுராகும். M.Com, PGDBM பட்டதாரியான இவர் பெரும்பாலான இஸ்லாமிய இதழ்களில் எழுதி, சில போட்டிகளில் வென்றவருமாவார். துபையின் பிரபல்யமான ETA குழுமத்தின் Trading And Shipping துணை நிறுவனத்தில் Accountant ஆகப் பணியாற்றிக் கொண்டு, எழுத்துலகிலும் காலூன்றியுள்ள சகோதரரின் கட்டுரை, இவ்வாண்டுக்கான போட்டியில் மூன்றாம் பரிசை வென்றதற்காக நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். - சத்தியமார்க்கம் நடுவர் குழு.







அறுபத்திரண்டு ஆண்டுகளுக்குமுன் நாம் விரட்டியடித்தது ஆங்கிலேயே அதிகாரிகளையும் அவர்களின் படைகளையுமே தவிர வேறில்லை என்ற உண்மையினைத் தற்போது உணர்ந்து கொண்டிருக்கிறோம். சுதந்திர தினக்கொண்டாட்டங்களை நாம் கொண்டாடுவதில் அர்த்தம் இருப்பதாகத் தோன்றவில்லை. உண்மையாளர்களும் உழைப்பாளர்களும் சிறுபான்மையினரும் தாழ்த்தப்பட்டோரும் நடுத்தர, மற்றும் அடித்தட்டு மக்களும் சுதந்திரம் என்ற வார்த்தையை வாசிக்கலாமேயொழிய ருசிக்க முடியாது என்ற நிலையே 60 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டு இருக்கும்போது அரசியல்வாதிகளும் கொலைகாரார்களும் கொள்ளைக்காரர்களுமே சுதந்திரக் காற்றினை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.



1947இல் நிறுத்திய சுதந்திரப் போராட்டத்தினைத் தொடர வேண்டிய சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆங்கிலேய அதிகாரத்தை விரட்டியடித்த நாம், சாதீயக் கொடுமைகளையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் ஊழல் நிர்வாகத்தினையும் சிறுபான்மை விரோதப் போக்கினையும் மறுக்கப்படும் நீதியையும் விரட்டியடிக்க மறந்துவிட்டோம் என்று சொல்வதை விட மறுத்துவிட்டோம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஆம், சுதந்திரப் போராட்டத்தின்போது சில தலைவர்கள்(?) செய்த சதியின், சூழ்ச்சியின் விளைவுகளைத்தாம் நாம் அனுபவித்து வருகிறோம்.

இத்தகைய சூழ்ச்சிகளை முறியடிக்கவும் உண்மையான சுதந்திரக் காற்றினை ஒவ்வொரு குடிமகனும் சுவாசிக்கவும் இந்தியா மீண்டுமொரு சுதந்திரப் போராட்டத்தினை சந்திக்கவேண்டியிருக்கிறது. சுதந்திரப் போராட்டம் எனும்போது அதனை எதன் வழியில் எடுத்துசெல்வது என்ற கேள்வி இயற்கையாகவே தோன்றும். ஆம், ஆங்கிலேயர்களின் அதிகாரத்தினை நாட்டிலிருந்து விரட்டியடிக்க இஸ்லாமியர்களின் வீரமும் தியாகங்களும் எவ்வாறு முன்னணியில் நின்றதோ அதுபோலவே தற்போதைய போராட்டத்திலும் இஸ்லாமும் முஸ்லிம்களுமே முன்னணியில் நிற்க முடியும். அதனை வழிநடத்தும் ஆற்றலும் தகுதியும் இஸ்லாத்திடமே இருக்கிறது என்பதனை உலகம் உணரத் துவங்கிவிட்டது. இந்தியா மற்றுமொரு சுதந்திரப் போராட்டம் நோக்கி தள்ளப்படுவதற்கான காரணங்கள் சிலவற்றை காண்போம்:

சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை:



"இந்திய தேசத்தில் முஸ்லிமாக இருப்பதுதான் இப்போது உலகில் ரிஸ்க்கான விஷயம்!" (ஆனந்த விகடன்20-08-08).



இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையானது என்பதற்கு பாகல்பூர், சூரத், பம்பாய், கோயம்புத்தூர், குஜராத், ஒரிஸ்ஸா முதல் காஷ்மீர் வரை நிகழ்ந்த - நிகழ்ந்து கொண்டிருக்கின்ற காட்சிகளே போதுமானது. சமூக விரோதிகள் ஒரு பக்கம் சிறுபான்மை மக்களைத் தாக்குகிறார்கள்; காவல்துறை மற்றொரு பக்கம் தாக்குகிறது. அரசுகள் மெளனமாக வேடிக்கை பார்க்கின்றன. பள்ளிவாசல்களும் கிறிஸ்தவ ஆலயங்களும் திட்டமிட்டுத் தீக்கிரையாக்கப் படுகின்றன. இஸ்லாமியப் பெண்கள் மற்றும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளின் கற்புகள் ஆர்.எஸ்.எஸ் போன்ற சமூக விரோதிகளால் சூரையாடப்படுகின்றன. இதற்குக் காரணமான கொடூரர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படுவதற்கு பதிலாக அரசின் அரவணைப்பில் ஆனந்த வாழ்வு வாழுந்து கொண்டிருக்கிறார்கள். என்கவுண்ட்டர் என்ற பெயரில் முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவதும் கேள்விக்கணக்கின்றி ஆண்டுகணக்கில் எந்தவிதமான விசாரணையுமின்றி சிறையிலடைக்கப்படுவதும் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டன. இதுதான் நாம் பெற்ற சுதந்திரமா? சுதந்திரம் என்பது இதுபோன்ற கயவர்களூக்குதானா? இதுபோன்ற நிகழ்வுகள் சிறுபான்மை சமூகத்தை மீண்டுமொறு சுதந்திர போராட்டத்தினை நோக்கியே இட்டுச் செல்லாதா?. சிறுபான்மை மக்களும் சுதந்திரக் காற்றினை சுவாசிக்க அரசுகள் ஆவன செய்யாமல் அடிமைத் தனத்தில் ஆழ்த்தும்போது மீண்டுமொரு சுதந்திரப் போராட்டமே சரியான தீர்வாக இருக்கமுடியும். மதச்சார்பற்ற இந்தியா என்பது வார்த்தைகளில் இருக்கிறதேயொழிய வாழ்க்கையில் இருப்பதாகத் தெரியவில்லை. உரிமைகளையே சலுகைகள் என்ற பெயரில்தான் பெறமுடியும் என்ற அவலநிலையிலேயே சிறுபான்மையினர்கள் தங்களின் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நாட்டில் அதிகரித்துக்கொண்டே செல்வதும், அரசும் காவல்துறையும் மதவெறி பிடித்தவர்கள் நடத்தும் தாக்குதல்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் உறுதியாக எடுக்க மறுப்பதின் விளைவே சிறுபான்மை மக்கள் ஒரு சுதந்திரப் போராட்டத்தினை நிகழ்த்தக் காரணங்களாக இருக்கிறது.



சாதீய பாகுபாடு:



"இந்தியாவில் சட்டங்கள் ஆட்சி செய்யவில்லை, சாதிகளே ஆட்சி செய்கின்றன" - ஆம்னெஸ்டி 2008



இந்த வார்த்தையில் இருக்கும் உண்மையையும் சொல்லித்தான் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றில்லை. தற்போதைய நாட்டு நடப்புகளை பார்த்தாலே எளிதில் தெரிந்துவிடும்.



இந்தியாவில் உண்மையான பெரும்பான்மை மக்களாகத் திகழும் ஆதிதிராவிட, தலித்தின அன்பர்களின் வாழ்வுரிமை இன்று கேள்விக்குறியாக்கப் பட்டுள்ளதை மறுப்பதற்கில்லை. இந்தியாவில் இருக்கும் தலித்துகளில் சுமார் 60 சதவீதம் பேர் தனக்கென சொந்தமாக ஒரு சிறுதுண்டு நிலமில்லாதவர்களாகவும் அதில் 40 சதவீதம் பேர் அடிமைத் தொழிளாளர்களாகவும் இருப்பதாக ஓர் அறிக்கை கூறுகிறது. ஏறக்குறைய இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் சாதியக் கொடுமை அரங்கேறுவது வாடிக்கையாகிவிட்டது. மாட்டிற்கு வழங்கும் மரியாதையை மனிதனுக்கு வழங்க மறுக்கும் ஆதிக்கவர்க்கத்தினைத் தண்டிக்க இந்திய அரசுகள் மெத்தனம் காட்டுவது நாம் உண்மையிலேயே சுதந்திரம் பெற்றுவிட்டோமா? என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறது. தலித்துகளை உயிரோடு எரிப்பதும் தலித் பெண்களின் கற்புகள் சூறையாடப்படுவதும் தலித்துகள் மனிதனின் மலத்தினை திண்ண வற்புறுத்தப் படுவதும் ஆங்காங்கே அடிக்கடி நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது. இவற்றுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க அரசுகள் திராணியற்று நிற்கும்போது மீண்டுமொரு சுதந்திரப் போராட்டத்தினை துவங்குவதைத்தவிர வேறுவழி இருப்பதாக தெரியவில்லை.



D துல்சிராம் என்ற ஒரு சமூக ஆர்வளர் கூறுகையில் "இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகிலிருந்து ஏறக்குறைய சுமார் 10 லட்சம் தலித்துகள் கொல்லப்பட்டும், 30 லட்சம் தலித் பெண்களின் கற்பு கயவர்களால் சூறையாடப்பட்டுள்ளதாக"வும் கூறுகிறார். "இது சுதந்திரத்திற்கு பிறகு நடைபெற்றப் போர்களில் நாம் இழந்த இராணுவத்தினரின் எண்ணிக்கையை விட 25 மடங்கு அதிகமாகும்" என்றும் அவர் கூறுகிறார்.



1991ஆம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி ஒரு நாளைக்குச் சராசரியாக 2 தலித்துகள் கொல்லப்படுவதாகவும் 3 தலித் பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும் 2 தலித்துகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுவதாகவும் கூறுகிறது.



இத்தகைய சூழ்நிலையின் எதிர்வினை என்னவாக இருக்க முடியும்?. நிச்சயமாக மீண்டுமொரு சுதந்திர போராட்டத்தினை நிகழ்த்துவதாக மட்டுமே இருக்க முடியும்.



நீதி(?) த்துறை:



"இந்திய அரசு என்பது நீதி மறுக்கப்பட்ட ஒரு அபாயப் பிரதேசம்" - தருண் தேஜ்பால்



அசாமில் மோர்காவ் எனும் கிராமத்தில் 27.12.2008 அன்று மசாவ் லாலூங் என்ற 80 வயது முதியவர் இறந்தார். இது ஒரு செய்தி அல்ல. ஆனால், அவரது 60 ஆண்டு கால வாழ்க்கை இந்திய சிறையிலேயே கழிந்தது என்பதுதான் செய்தி. குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனையாக அல்ல. வெறும் விசாரணைக் கைதியாக என்பதுதான் இதில் உச்சக்கட்டக் கொடுமை.



இதுதான் நாம் பெற்ற சுதந்திரமா? நம் முன்னோர்கள் செய்த தியாகங்களின் பலன் இதுதானா? அதற்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுவா?



நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதித்துறையே இவ்வளவு அநியாயமாக நடந்துக்கொள்ளுமேயானால் நீதியைத்தேடி மக்கள் எங்கே செல்வார்கள்?. வெளியில் வந்தது ஒரு மசாவ் லாலூங் என்றால் வெளியில் வராத எத்தனை எத்தனை லாலூங்குகள் இருக்கிறார்களோ? சிறையில் கழித்த ஆண்டுகள் வேண்டுமானால் ஒருவேளை குறைவாக இருக்கலாம். குற்றவாளிகளைத் தண்டிக்க இந்தியாவில் சட்டங்களுக்குப் பஞ்சமில்லை. ஆனாலும் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்ததாக வரலாறு இல்லை. ஏன்? சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் ஒருபுறமென்றால் தாமதப்படும் நீதியே தலையாய காரணமாக இருக்கிறது. தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும் அல்லது தவறு இல்லையென்றால் விடுதலை செய்யவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக இவை இரண்டையுமே செய்ய நீதிமன்றங்கள் அலட்சியம் செய்கின்றன.



சுதந்திர(?) இந்தியாவின் நீதித்துறையில் கறுப்புக் காலங்கள் ஏராளம். அவற்றுள் குறிப்பாகக் கூறவேண்டுமெனில் தடா என்ற கொடூரமான சட்டம் அமலில் இருந்த காலமும் ஒன்று. தடா சட்டத்தின் மூலம் "66,000 அப்பாவிகள் எவ்விதக் குற்றமும் செய்யாமல் எவ்வித வழக்கு விசாரணையும் நடைபெறாமல் காவல் துறையாலும் நீதிமன்றத்தாலும் பல ஆண்டுகள் சட்ட விரோதமாகச் சிறைவைக்கப் பட்டுத் தண்டிக்கப்பட்டனர். 725 பேர் மீது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டது".



தற்போதைய நீதித்துறையைப் பற்றி புகழ்பெற்ற சமூக ஆர்வளர் அருந்ததி ராய் கூறுகையில்



"நீதிமன்றங்களில் மக்கள் இயக்கங்கள் நியாயம் வேண்டி நின்ற காலம் ஒன்று இருந்தது. நீதிமன்றங்கள் அநீதியான தீர்ப்புகளைத் தருகின்றன. வறிய மக்களை இழிவுபடுத்தும் வகையில் நீதிமன்றம் பயன்படுத்தும் மொழியைக் கேட்கும்போது, அதிர்ச்சியில் நமது மூச்சே நின்றுவிடும் போலிருக்கிறது" - - தெஹல்கா: 31.03.07



நீதிகள் மறுக்கப்படும் போதும் தாமதப்படும் போதும் அதனை எதிர்த்து போராடாமல் அமைதி காப்பது எந்த விதத்திலும் நியாயமாக இருக்க முடியாது. சுதந்திர இந்திய வரலாற்றில் எத்தனையே இயக்கங்கள் தடை செய்யப்பட்டதுண்டு. அதில் சிமியும் ஒன்று. ஆனால் தடை செய்யப்பட்ட மற்ற இயக்கங்களுக்கும் சிமி தடை செய்யப்பட்டதிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்திய நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு விரோதமாகச் செயல்பட்டதற்கான ஆதரங்களை வைத்துதான் அனைத்து இயக்கங்களும் தடைசெய்யப்பட்டன. ஆனால் தடை செய்த பிறகு ஆதாரங்களைத் தேடி அரசும் காவல்துறையும் அலைவது சிமிக்கு மட்டுமே பொருந்தும். (இந்த ஆக்கம் உருவாகும்வரை சிமிக்கு எதிராக இந்தியக் காவல்துறையினரால் வலுவான ஓர் ஆதாரத்தைக்கூடத் திரட்டமுடியவில்லை). நாட்டில் சதி வேலைகளில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்ட சிமி இயக்கத்தினர் மீது தொடரப்பட்ட வழக்குகள் பற்றி தெஹல்கா என்ற இணையதளம் தனது ஆய்வறிக்கையில் கூறுகையில், "அனைத்தும் ஆதாரங்கள் அற்றவை; குற்ற விசாரணைகளின் சாதாரண அடிப்படை நடைமுறை நடவடிக்கைகள்கூட மறுக்கப்பட்ட வழக்குகள்; இந்திய இளம் தலைமுறையினருடைய வாழ்க்கையை, அவர்களுடைய குடும்பங்களுடைய வாழ்க்கையை ஈவிரக்கமின்றிக் கசக்கி எறியும் வழக்குகள் அவை" என்று குறிப்பிட்டது இங்கு நினைவு கூரத் தக்கது.



நீதியைக் காக்க வேண்டிய காவல்துறையினர்மீது பெரும்பாலான இந்திய மக்கள் எப்பொழுதுமே நம்பிக்கை வைப்பதில்லை. நீதியை வழங்கவேண்டிய நீதிமன்றங்களின் மீதான மக்களின் நம்பிக்கை ஊசாலாடிக்கொண்டிருப்பதின் தாக்கமே இந்திய சமூகத்தை உண்மையான சுதந்திர தாகத்தினை நோக்கி இட்டுச்செல்கிறது.



ஊழல்மயம், லஞ்சமயம்:



"இந்தியாவுடைய மந்தமான வளர்ச்சிக்கு முதன்மை காரணம் ஊழல்" - என். விட்டல், முன்னாள் இந்திய ஊழல் தடுப்பு ஆணையர்.



ஆம், நூறு சதவீதம் இது உண்மை என்று சொல்லலாம். இந்தியாவிற்கும் இந்திய ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் எதிர்காலத்திற்கும் முக்கியமான ஆபத்தாக விளங்குவது ஊழல்தான். ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஒரு தங்க பதக்கம் வாங்கினாலே அது உலக சாதனையாகக் கருதப்படுகிறது. இந்தியர்களிடம் திறமையில்லை என்று அர்த்தமில்லை. விளையாட்டுத் துறையிலும் ஊழல் நிறைந்திருப்பதே இதற்கும் காரணம். ஆனால் ஊழலில் யார் முதலிடம் பிடிப்பார் என்று போட்டி வைத்தால் இந்தியா அதில் வெற்றிக்கொடி நாட்டி விடும். இந்த அளவிற்கு தலைவிரித்தாடும் ஊழலானது இன்று நேற்று உருவானதல்ல. சுதந்திர(?) இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்னாலயே அது தோன்றி விட்டது.



லஞ்சத்திலும் ஊழலிலும் மூழ்கியிருப்போர் சதவீதத்தில்

அமைச்சர்கள் / அரசியல்வாதிகள்

98 %



காவல்துறையினர்

97 %



அரசு அதிகாரிகள்

88 %



வழக்கறிஞர்கள்

80 %



தொழிலதிபர்கள்

76 %



வங்கி அலுவலர்கள்

69 %



நீதிபதிகள்

66 %



பத்திரிக்கையாளர்கள்

55 %



ஆசிரியர்கள்

43 %



சாதாரண குடிமக்கள்

38 %



கடந்த ஐம்பது ஆண்டுகால ஆட்சியாளர்களின் அலட்சியப்போக்கினால் இந்த அளவிற்கு இந்தியாவை அது அச்சுறுத்துக்கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் முதல் சாதாரண குடிமகன்வரை இந்தியாவில் ஊழலும் லஞ்சமுமே ஆதிக்கம் செலுத்துகிறது. அனைத்து மட்டத்திலும் அது மிக வலுவாக காலுன்றியிருப்பதனை பல ஆய்வறிக்கைகள் நமக்கு தெள்ளத்தெளிவாக நிரூபிக்கின்றன.



இந்த உண்மை மிகக் கேவலமானது! மற்ற நாடுகளில் காணப்படும் லஞ்சத்திற்கும் இந்தியாவில் காணப்படும் லஞ்சத்திற்கும் பெரிய வித்தியாசம் என்னவென்றால் மற்ற நாடுகளில் அதிகாரிகள் தங்களுடைய கடமை தவறுவதற்குத்தான் லஞ்சம் கேட்பார்கள். ஆனால் இந்தியாவில் தங்களுடைய கடமையை செய்வதற்கே அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள். இந்தியாவை நாம் ஏழ்மையான நாடு என்று கூறிக்கொண்டிருக்கிறோம். ஆனால் சுவிஸ் வங்கியில் அடைபட்டிருக்கும் தொகையில் இந்திய அளவைப் பார்க்கும் எவரும் இனி அப்படி சொல்ல மாட்டார்கள். 2006ஆம் ஆண்டு சுவிஸ் வங்கி வெளியிட்ட கணக்கின்படி இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் வைத்திருக்கும் தொகையானது சுமார் 1456 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது வெளிநாடுகளில் இந்தியாவிற்கு இருக்கும் கடன் தொகையை விட 13 மடங்கு அதிகம். இதில் ஏற்க்குறைய 95 சதவீதம் கருப்புப் பணம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதி ல்லை. சுவிஸ் நாட்டிற்கு ஆண்டுதோறும் சுமார் 80,000 இந்தியர்கள் பயணம் மேற்கொள்வதாகவும், அதில் சுமார் 25,000 நபர்கள் சிறியதொரு இடைவெளிக்கு ஒருமுறை செல்வதாகவும் ஒர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பயணம் மேற்கொள்ளும் இவர்கள் சுற்றுலா பயணிகள் அல்ல. கருப்புப் பணத்தை அங்கே போடுவதற்காகச் செல்பவர்கள். ஊழல் தொடர்பாக பல வழக்குகள் இந்தியாவையே உலுக்கிய வரலாறுகள் உண்டு:



போபர்ஸ் பீரங்கி பேர வழக்கு



ஜெ.எம்.எம்.எம்.பி.க்களுக்கு லஞ்சம் வழக்கு



பங்குச்சந்தை ஹர்ஷத் மேத்தா வழக்கு



யூரியா ஊழல் வழக்கு



ஹவாலா வழக்கு



என அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆனால் மேற்கூறிய அத்தனை வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவே இல்லை என்பதுதான் நாம் இங்குத் தெரிந்து கொள்ள வேண்டிய சுதந்திர இந்தியாவின் கசப்பான உண்மை. வறியவர்களிடமிருந்து லஞ்சமாகக் கொள்ளையடிக்கப்பட்ட பணம் நாட்டின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பயனளிக்காமல் முடங்கி கிடக்கிறது. ஏழை எளியவர்கள்மீது தனது அதிகாரத்தைப் பிரயோகிக்கும் அரசுகள், ஊழல்வாதிகளின் மீதும் கருப்புப் பண முதலைகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் இந்தியா மீண்டுமொரு சுதந்திர போராட்டத்தினைச் சந்தித்தே தீர வேண்டும்.



அடாவடி அரசியல்:



தங்களுடைய உயிர், உடைமை, உற்றார் உறவினர்களை இழந்த தியாகச் செம்மல்களால் பெறப்பட்ட சுதந்திர இந்தியா(?) இன்றோ அயோக்கியர்களும் அடாவடிகளும் ஆதிக்கம் செய்யும் புகலிடமாக மாறியுள்ளது. நாட்டை வழிநடத்துவதற்காக மக்களால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட உறுப்பினர்களின் அனேகம் பேர்களே நாம் கூறிய அயோக்கியர்கள். ஓர் ஆய்வறிக்கையின்படி தற்போதைய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களில் சுமார் 120 உறுப்பினர்கள் குற்றவழக்கினை ஆனந்தமாக சுமந்து கொண்டிருப்பவர்கள். இது மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 22.10 சதவீதமாகும். இவர்கள் அரங்கேற்றியது சாதாரண குற்றமாக இருக்கக் கூடுமென்று நினைத்தால் நாம்தான் பெருத்த ஏமாளியாக இருப்போம். ஏனெனில், இவர்கள் செய்த குற்றங்களின் வரிசையைப் பார்த்தால்,



கொலை செய்தது,



கொலை செய்ய முயன்றது,



கொள்ளையடித்தது,



பெண்களின் கற்பைச் சூறையாடியது,



ஆட்களைக் கடத்தியது,



அதிபயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது,



சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது



என, சட்டம் இயற்ற(!)க் கூடிய இவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது. இதில் எந்த கட்சியைச் சார்ந்தவர்கள் முதலிடம் பிடிப்பார்கள் என்பது பெரிதாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை. நாட்டில் எங்கு வன்முறை வெறியாட்டம் நடந்தாலும் சரி, அப்பாவிகளை அதிலும் குறிப்பாக முஸ்லிமைகளைக் குறிவைத்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினாலும் சரி, மக்களை உயிருடன் கொளுத்துவதிலும் சரி, அப்பாவிப் பெண்களை கற்பழிப்பதிலும் சரி முதலிடம் வகிக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் கூட்டமான பி.ஜே.பி.தான் இதிலும் முதலிடம் வகிக்கிறது. குற்றப்பின்னணியுள்ள இந்த 120 எம்.பி.க்களில் சுமார் 29 உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸின் வகுப்பறையில் பயின்ற பி.ஜே.பி கட்சியினைச் சார்ந்தவர்கள். அடுத்தடுத்த இடங்களில் காங்கிரஸ் =24, சமாஜ்வாதி =11, ரா.ஜனதா தளம் =8, சி.பி.எம் =7, பகுஜன் சமாஜ் கட்சி =7, தே.காங்கிரஸ் =5, சி.பி.ஐ.=2, மீதமுள்ள வழக்குகளை மற்ற கட்சிகள் பகிர்ந்து கொண்டுள்ளன. இதில் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மேற்கூறிய ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறான கொள்கையுடையவை என்பதுதான். ஆக, நாடாளும் மன்றத்தில் ஒருவர் உறுப்பினராக வேண்டுமென்றால் அவர் மேற்கூறிய குற்றங்களில் ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது எழுதப்படாத தகுதியாக நடைமுறைக்கு வந்துவிட்டதின் வெளிப்பாடே இவைகள். கொலைப் பின்னணியும் கொள்ளைப் பின்னணியும் கற்பழிப்பு பின்னணியுமுடையவர்கள் ஆட்சி அதிகாரத்தில் ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டிருக்கும்போது சாதாரண மக்களுக்கோ, எளியவகளூக்கோ, வழிவர்களுக்கோ, பெண்களுக்கோ எப்படி பாதுகாப்பு இருக்க முடியும்?. ஆங்கிலேய ஆட்சி 50 வருடத்திற்கு முன்பு எண்ணவெல்லாம் செய்ததோ அதனையே இன்று நம் அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க ஒரு சுதந்திரப் போராட்டம் தேவைப்பட்டதுபோல் தற்போதும் நம் நாட்டில் புரையோடிப் போய்விட்ட மேற்கூறிய அனைத்துவகைக் குற்றங்களையும் களையெடுப்பு நடத்திட இன்னும் ஒரு சுதந்திரப் போராட்டம் தேவைப்படுகிறது.



இந்தியா மீண்டுமொரு சுதந்திரப் போராட்டத்தைச் சந்திக்க வேண்டிய அவசியத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதற்கான சொற்ப காரணங்களை மட்டுமே நாம் மேலே சுருக்கமாக ஆராய்ந்தோம். ஆனால் உண்மையில் அவை மட்டுமே காரணங்களாக இருக்காவிட்டாலும் அவை முக்கியக் காரணங்கள் என்பதனை அரசுகள் சிந்திக்க வேண்டும். இந்திய அரசு இயந்திரங்கள் காட்டும் முஸ்லிம் விரோதப் போக்கினை விளக்க முற்பட்டோமேயானால் அதன் பட்டியல் நீளும் என்பதனை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்திய மக்களை அரசு இயந்திரங்கள்தான் புதியொரு சுதந்திர வேட்கையை நோக்கி இழுத்துச்செல்கிறது என்பதனை அரசுகள் உணர வேண்டும். நாடு சந்தித்துக்கொண்டிருக்கும் ஏறக்குறைய அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணம் அரசுகளும் அரசு இயந்திரங்களும் நீதித்துறையும் காட்டும் பாரபட்சமான பார்வைகளூம் நேர்மையற்ற நடவடிக்கைகளும் ஒரு தலைபட்சமான அணுகுமுறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை. சாதாரண மற்றும் அடித்தட்டு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்க வேண்டிய பத்திரிகைத் துறையோ இந்தியாவில் என்றோ தோற்றுவிட்டது. பாசிச மயமாகிவிட்ட இந்திய ஊடகத்துறையினால் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை வெளி உலகிற்கு எடுத்துரைக்க இயலாது என்பதனால் இனிவரும் காலங்களில் தங்களால் இயன்ற வழியில் மக்களே போராட வேண்டும் அதன் மூலமே வெற்றியினையும் ஈட்ட வேண்டும்.



மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான் (அல் குர் ஆன் 14:42)



(நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், தீயதும், நல்லதும் சமமாகா. எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள் என்று நீர் கூறுவீராக (அல் குர் ஆன் 5:100).









ஆக்கம்: எம்.பைஜுர் ஹாதி, நீடூர்.


 Thanks  to  ----சத்தியமார்க்கம்.காம்

No comments: