Tuesday, July 28, 2020

தொட்டால்தொடரும் ! #குறுந்தொடர் -2 / Abu Haashima






அது ஆச்சர்யங்களை கொண்டு வந்து குவித்த இருபதாம் நூற்றாண்டின்
இறுதி காலம்.

1960 வருட வாக்கில் துபாய் மஸ்கட் நாடுகளுக்கு நம் மக்கள் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்தார்கள்.
பஸ்ஸில் சென்னை வரை பயணிக்காதவர்கள் கூட ஜெயந்தி ஜனதா ரெயிலில் பம்பாய்க்கு பயணித்து
அங்கிருந்து விமானம் ஏறி வளைகுடா நாடுகளுக்கு பயணித்தார்கள்.
ஏர்போர்ட்
இமிகிரேசன்
ஏர் ஹோஸ்டஸ்
வான்வெளி எல்லாமே புதுசு.
குடும்பத்தில் எல்லோரிடமும் பிரியா விடைபெற்று ...
" என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன் .."
என்று முணுமுணுத்துக்கொண்டே பறந்தார்கள்.

அதுவே லேட்டுதான்.
அதற்கு முன்னரே மேலை நாட்டவர்களும் இந்தியாவின் உயர் ஜாதி இந்துக்களும்
குஜராத்திகளும் அங்கே காலூன்றி விட்டார்கள். புதிதாகப் போனவர்கள்
அவர்களின் எடுபிடிகளாகவும் அல்லது அவர்களின் ஆளுமையின் கீழும் வேலை செய்தார்கள்.
சில வருடங்களில் அரபு நாடு தமிழர்களின் மற்றொரு சிங்கப்பூர் மலேசியாவாகிவிட்டது.

சிங்கப்பூர்வாசிகளைப் பார்த்து ஏக்கப்பார்வை பார்த்தவர்கள் வேட்டியை மாற்றி கால்சராயைப் போட்டுக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள்.
1970 க்குப் பிறகு கொஞ்சம் கூடுதல் மக்கள்போய் துபாயை பிரபலமாக்கி தாங்களும் பிரபலமாகி விட்டார்கள். நமக்கு முன்னால் அங்கே போய் பழம் தின்று கொட்டையும் போட்ட மலையாளிகளுக்கும் குஜராத்திகளுக்கும் இது பெருங்கடுப்பு. அவர்களோடு போட்டிப் போட்டுத்தான் நம்மவர்கள் படிப்படியாக உயர முடிந்தது. அப்புறம் நடந்த நிகழ்வுகள் தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் உச்சகட்ட மாற்றங்களை ஏற்படுத்தியது.

அரபு நாட்டில் என்ன வேலை என்பதை பற்றி யாரும் கவலைப் படவில்லை. என்ன சம்பளம் என்பதுதான் குறி. சம்பளம் குறைவாக இருந்தாலும்கூட அரேபியாவில் தங்கள் மகனும் வேலை பார்க்கிறான் என்பது சமூக அங்கீகாரத்துக்கான அடையாளமாக ஆகிப்போனது.

"ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை பாஸ்போர்ட்டுடன் கண்ட தாய் "

என்பது தாய்மார்களின் புதுக் குறளாகிப்போனது.
ஆறாம் வகுப்போ பத்தாம் வகுப்போ
"நீ படிச்சுக் கிழிச்சது வரை போதும். அரேபியாவுக்குப்போ" என்று பிள்ளைகளை அடித்து விரட்டாத குறையாக அரேபியாவுக்கு அனுப்பி வைத்தார்கள் பெற்றோர்கள்.

1975 லிருந்து 1995 வரை கிட்டத்தட்ட இருபது வருட காலம் இந்த நிலை சமூகத்தில் நீடித்தது. இந்த காலகட்டத்தில் மாட்டியவர்களின் படிப்பு அதோகதியானது.
ஆனால் ....
குடும்பங்களில் #வறுமை துரத்தப்பட்டு #செழுமை தலைகாட்டத் துவங்கியது. கல்யாணப் பேச்சுக்களில் எல்லாவற்றையும் விட
"மாப்பிள்ளை அரேபியாவில்" என்ற மந்திர வார்த்தைக்குத்தான் பெண்வீட்டுக் குடும்பம் வசப்பட்டது.

ஒரு மறுக்க முடியாத உண்மையை இங்கே குறிப்பிட வேண்டும்.
அது...
புதிதாக அரபு நாட்டுப் பணம் வந்த அந்த ஆரம்ப வருடங்களில்தான்
#வரதட்சணை அதிகமாக கேட்டு வாங்கும் வழக்கம் ஏற்பட்டது.
எந்த அளவுக்கென்றால் ...
ஒரு இடத்தில் பெண்பேசி முடிவு செய்தபிறகு மற்றொரு வீட்டில் அதைவிட பல மடங்கு அதிக வரதட்சணை தருவதாகக் கூறியதும் நிச்சயம் செய்த பெண்ணை வேண்டாம் என்று சொன்ன சம்பவங்கள் நிறைய உண்டு.

கடைகளில் வேலை பார்த்தவர்கள், வேலையில்லாமல் சுற்றித் திரிந்தவர்கள் படித்தவர்கள், படிக்காதவர்கள், பணக்காரர்கள் , ஏழைகள் என்று ஒருத்தர் பாக்கியில்லாமல் அனைவரையும் தன்பால் ஈர்த்துக் கொண்டது அரேபிய புவிஈர்ப்பு மையம். அது பெட்ரோலால் வளம் கொழிக்கும் வையம்.

இதில் பெரிய வேடிக்கை...
அரசு வேலை பார்த்தவர்கள்கூட
ஐந்து வருடம் லீவு போட்டு அரேபியாவுக்குப் போய் நல்ல முறையில் சம்பாதித்து விட்டு வந்து மீண்டும் பணியில் சேர்ந்து இப்போதும் ஓய்வூதியம் வாங்கி வருகிறார்கள். மற்றும் சிலர் கணிசமான
#ரியால்களை இழக்க மனமில்லாமல் அரசு வேலையை ராஜினாமாச் செய்துவிட்டு மீண்டும் அரபுநாட்டு வேலைக்கே சென்று விட்டார்கள்.

ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் வாப்பா உம்மாவிடம் அடிவாங்கிய பையன்களிடம் #பணம் புரளத் துவங்கியதும் #குணம் புரளத் துவங்கியது. விடுமுறையில் ஊருக்கு வந்தவர்கள் அதிகப்படியாகவே
#அலம்பல் போட்டார்கள்.
சமுதாயத்தின் கலாச்சாரம் மாறத் துவங்கியது. பணம் இல்லாதபோது அடக்கத்தோடு வாழ்ந்தவர்கள் அது வந்தபிறகு அடியோடு மாறிவிட்டார்கள். எல்லோருக்கும் பணத்தின்மீது அதீத காதல் ஏற்பட்டது. அதுவும் அரேபியா பணத்தின்மீது.
"அல்லாஹும்ம சல்லி.." என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் "சல்லி...சல்லி..." என்று மட்டும் ஜெபிக்க ஆரம்பித்தார்கள்.
குடிசைகள் "கான்க்ரீட்" வீடுகளாக
மாற ஆரம்பித்தன....
பாதி அரேபிய பணத்திலும் மீதி டவ்ரி பணத்திலும்.
அவர்களுக்கு,
"இது ஒரு பொன்மாலைப் பொழுது...."

ஆண் பிள்ளைகளை பெற்றவர்கள் மூன்று பேரையோ நான்கு பேரையோ அரேபியாவுக்கு அனுப்பி காசு பணத்தில் புரண்டார்கள்.
மூன்றோ நாலோ பெண்பிள்ளைகளை மட்டும் பெற்று ஆண்பிள்ளை பெறாத பெற்றோர்கள் துடித்துப் போய்விட்டார்கள்.
அவர்கள் அழுத அழுகையின்
#நிஜம் என் நெஞ்சில் இன்றும் நிழலாடுகிறது. ஒரு பெண்பிள்ளையை கல்யாணம் கட்டிக் கொடுக்க செந்நீரை சிந்தியவர்கள் மூன்று நாலு பெண்களை கட்டிக் கொடுக்க எங்கே போவார்கள்? ஊரில் எல்லோரும் அரேபியா மாப்பிள்ளைகள்.
அவர்களுக்குக் "கூலி" கூடுதல். மண்டபத்தில் கல்யாணம்,
பெண்வீட்டுச் சாப்பாடு,
சீர் செனத்தி என்று அப்போதே
பல லட்சம் செலவில் கல்யாணக் கலாச்சாரம் "விஸ்வரூபம்" எடுத்தது. இந்த ஏழைகள் படும் பட்டைப் பார்த்து மனம் வெதும்பி நான் எழுதிய கவிதையின் ஓரிரு வரிகளை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.

" அன்றைய திருமணங்களில்
கலந்து கொண்டோருக்கு
நபி பெருமானார்
வழிகாட்டுதலில் வந்தது
வலிமா விருந்தெனத் தெரிந்திருந்தது !

இன்றையத் திருமணங்களில்
உண்டு கலைவோருக்கு
தாங்கள் உண்டதும் குடித்ததும்
பெண்ணைப் பெற்ற
ஏழைத் தகப்பனின்
சதையும் ரத்தமும் என்பது
தெரியாமல் போனது...."

பெண்ணைப் பெற்ற காயல்பட்டணம் ஏழைத் தகப்பன்
காவேரிப் பட்டணத்திலும்
கோட்டைப் பட்டணம் ஏழை கோட்டாறிலும் தங்கள் மகளின் கல்யாணத்துக்காக "பிச்சை" எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இது அரேபியா பணத்தால் அரேபிய மாப்பிள்ளைக்கு மகளை கட்டிக் கொடுக்க வந்த ஆசையால் வந்த மிகப் பெரிய விபரீதம்.
#ரத்தக்_கண்ணீர் என்பார்களே,
அது இந்த ஏழைகள் வடித்தக் கண்ணீர்தான். இவ்வளவு கஷ்டப்பட்டு கல்யாணம் செய்து கொடுத்தாலும்
சில மாப்பிள்ளைகள் #ஷோக் அனுபவித்துவிட்டு பொறுப்பற்று நடக்க ஆரம்பித்தார்கள்.
"காணாததைக் கண்டால் தோணாதது தோணும்" என்பதுபோல் இந்த மைனர்கள் சுகம் அனுபவித்துவிட்டு, மனைவியின் நகை, பணம், வீடு எல்லாவற்றையும் குளோஸ் பண்ணிவிட்டு அவர்களை வறுமையில் வாட விடுவதும் வாடிக்கையாக நடைபெறும் சம்பவங்களாக மாறி இருந்தன.

வெளிநாட்டு வருமானம் பலரை நன்றாக்கி இருக்கிறது. ஏழைகளாக இருந்த பலர் தங்கள் கடின உழைப்பால் தங்கள் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்தார்கள். அவர்களுக்கும் அரபு நாட்டில் நல்ல வேலை வாங்கிக் கொடுத்தார்கள்.
2000க்குப் பிறகு சமுதாயத்தில் #கல்லாமை ஒழிந்தது. வாழ்க்கைத்தரம் உயர்ந்தது.ஒருவரைப் பார்த்து மற்றவர் தங்கள் வாழ்வை வளப்படுத்திக்கொள்ளப் போட்டிப் போட்டார்கள்.
பெண்களும் #டாக்டர்
#இஞ்சினியர் படிப்பு படித்து கல்யாணமாகி கணவனோடு வெளிநாட்டில் செட்டிலாகி அடுக்களையில் சமையல் செய்து சந்தோசமாக குடித்தனம் நடத்துகின்றனர்.
(நல்லாஇருக்கட்டும்.அல்ஹம்துலில்லாஹ்)

அரபு நாட்டில் சம்பாதிக்கும் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்களா?

#இல்லை
நிறைய படித்தவர்களுக்கு ஓரளவு வருமானமும் படிப்பே இல்லாத சிலருக்கு #எண்ணிபார்க்க முடியாத அளவுக்கு வருமானமும் வருவது ஒரு விசித்திரம். மேலும் ஒரேசீரான வருமானம் இல்லாததால் சமுதாயத்தில் மிகப்பெரிய #மேடு_பள்ளம் ஏற்பட்டு விட்டது.
ஏற்றத் தாழ்வுகள் தலை தூக்கி விட்டன. ஒரு புறம் செல்வத்தின் உச்சம். மற்றொரு புறம் தேவைக்கே போதிய வருமானம் இல்லாத சோகம். இரண்டுக்கும் இடையே சிக்கி குடும்பங்கள் பல அவதியும் அவமானமும் அடைகின்றன.
பத்தோ இருபதோ வருடங்கள் அரேபியாவில் சம்பாதித்தும் முழுமையான வெற்றியை வாழ்வில் பெற முடியாமல் "இன்னும் ஒரு பத்து வருஷம் தாக்குப் பிடித்து கடைசி மகளையும் கட்டிக் கொடுத்து வீட்டையும் கட்டி முடிச்சுடலாம்" என்ற நம்பிக்கையில் பலர் வாழ்கிறார்கள்.
இவர்கள் "உடல் சுகத்தை" குர்பானி செய்தவர்கள். மனைவி மக்களுக்காக இளமையை, இன்பத்தை தியாகம் செய்தவர்கள். ஒரு சந்தர்பத்தில் "அதற்காக" ஆசைப்பட்டு, கிடைக்காமல் துவண்டு, பொறுமையோடு வாழ்பவர்கள். (அல்லாஹ் - அவர்களுக்கு அருள் புரிய வேண்டும்).

நாம் எடுத்துக் கொண்ட தலைப்பின்படி இவர்களால் இப்போதைக்கு ஊரில் செட்டிலாக முடியாது. இப்போது வெளிநாட்டில் வாழும் 95 சதவீத முஸ்லிம்களால் "சம்பாதித்தது போதும், ஊருக்குப் போகலாம்" என்று மூட்டையை கட்ட முடியாது. கட்டவும் கூடாது. ஏன்?

#இன்ஷா_அல்லாஹ்
நாளை சொல்கிறேன்.

அபு ஹாஷிமாAbu Haashima




No comments: