Friday, March 19, 2021

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

 

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்

அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்

பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்

மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்

பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்

முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்

வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்

இறந்து பாரென இறைவன் பணித்தான்!

அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்

ஆண்டவனே நீ ஏன்எனக் கேட்டேன்!

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி

அனுபவம் என்பதே நான்தான்என்றான்!

 

-கண்ணதாசன்

No comments: