Friday, September 8, 2017

மாயூரத்திலிருந்து...மயிலாடுதுறை வரை !

முன்னொரு காலத்தில்
இன்றுபோல் இல்லை மயிலாடுதுறை !
வேர் போல இருந்த மத ஒற்றுமை
சேறு போல என்றானது !
பியர்லெஸ் படக்கூட வாசல் தொட்டு
பழங் காவிரி நீர் நிரம்பி ஓடும்
பெருநதி என்று பெருமைகொண்டாடியது
பேருக்கு கூட காணோமின்று!
கடைமுழுக்கு என்ற நாளில்
பொங்கிவழியும் மக்கள் கூட்டமும்
டி ஏ எஸ் பட்டணம்பொடி மெகாபொம்மையும்
மும்மத மக்களையும் கவர்ந்த காலமது !

தைக்கால்கூடு கொடியேத்த நாளில்
கூடிய நண்பர்களுக்கு நள்ளிரவுகாட்சி
சுந்தரம் டாக்கீஸில் உண்டு
முந்தி இடம் பிடிப்பவருக்கு தூண்கள் மறைக்காது ...கி..கி
கொத்த தெரு என்பது சண்டைக்கார எல்லையென்று சிறுவர் நாங்க பயந்ததுண்டு!
தருமபுர ஆதீன தென்னமரத் தோப்புக்குள்
திகில் பெண் ஆவிகள் நடமாட்டமுண்டாம்!
சின்னக் கடைத்தெரு ஸலாமத் ஸ்டோர்
சொல்வழக்கில் ஒரு லேண்ட் மார்க்
டி.ராஜேந்தர் சிங்கிள் டீ தேவைக்கு
சில நண்பர்களை தேடியதும் உண்டு அப்போ !
தரங்கம்பாடிக்கு கூவிபோகும் ரயிலில்
நாமும் பயணிக்கலாமேன்னு மனசு ரொம்ப ஆசைப்பட்டதுண்டு
சப் ஜெயிலை 4 நெ பஸ் கடக்கையில்
உள்ளே எத்தனை திருடர்களும் கைதிகளும் இருப்பார்களென்று உயர
மதில்பார்த்து உள்ளுக்குள் அஞ்சும் மனசு !
பள்ளிக்கூடம் பயிலுகையில்
பல சினேகிதர்கள் சின்னகடைதெரு
பாலா மாமி வீடுபற்றி கிசுகிசுப்பார்கள் !
மணிக் கூண்டு தெரு தாண்டினால்
வேறு தெருக்களில் விலாசம் தேடவேண்டும் !
காளியாகுடி ஊத்தப்பமும்
அபின்கலந்த காபி சுவையும் அப்பப்பா !
ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்றார்கள்.....ஆயிரம் ரூவா நோட்டும்
போச்சு... மாயூரமும் மாயமாய் போச்சு !
மயிலாடுதுறையாம் !
பேரும் மாறிப் போச்சு
பெருமையும் வீணாப் போச்சு !

- கஜினி அயூப்

No comments: