Monday, September 11, 2017

தேடல் ....! (பாகம் - 2 )

புனிதத்தின் தேடலில்
பூவுலகில் அலைந்தேன்
புண்ணியங்கள் வேறெங்குமில்லை
மனிதத்திலென கண்டேன்

சுகந்திரத்தின் தேடலில்
ஆண்டானை தேடினேன்
அவனும்கூட யாருக்கோ
அடிமையாக  இருக்கக் கண்டேன்



செயற்கையின் தேடலில்
சுற்றுச்சூழலை சீர்குலைத்தேன்
அழிவின் எல்லையை அடைந்ததும்
இயற்கையின் ஏழிலைக் கண்டேன்

சுயநிலை தேடலில்
தன்னிறையில் திளைத்தேன்
தன்குறை அறிந்ததும்
சுயநிறைவு  கண்டேன்

உண்மையின் தேடலில்
உலகில் உழன்றேன்
விரக்தியின் உச்சமடைந்தபின்
என்னிடமே கண்டேன்

கனவுகளின் தேடலில்
மெய்மறந்து நின்றேன்
வாழ்வில் நிகழ்வுகளே
நிதர்சனமென கண்டேன்.

புதியபாதையின் தேடலில்
பழையன மறந்திட
புதுமைகள் புகுந்து
தடம்புரள கண்டேன்.

ஒன்றுமில்லா தேடலில்
காலத்தை போக்கினேன்
காலம் கடந்ததும்
ஞானம்பிறக்க
கண்டேன்.

ராஜா வாவுபிள்ளை

No comments: