Sunday, October 30, 2016

சுவைத்துக் கொண்டே இருப்பேன் ....!

வாழ்வில்
அறியாமையை
அகற்ற முயன்று
முடிவில்லா தொடர் கண்ணியில்
அங்கமானேன்
வாழ்வின்
தேடல்களில்
தொடர்ந்து சென்று
மூழ்கிவிடாமல் முழுமூச்சுடன்
நீந்துகிறேன்

வாழ்க்கையின்
வறட்டு கௌரவங்களில்
புதைந்துவிடாமல் தப்பித்து
நிதர்சன கரடுமுரடுகளில் கால்பதித்து
முன்செல்கிறேன்
வாழ்க்கையின்
வசந்தங்களில்
குளிர்காய்ந்து குதூகலித்து
முதுமையின் வெம்மைக்காக
காத்திருக்கிறேன்
வாழ்க்கையின்
மேடுபள்ளத்தில் பயணித்து
பூங்காவனத்தில் பிரவேசித்து
முழுவதுமாய் தங்கிவிட கங்கணம்
கட்டுகிறேன்
வாழ்வின்
கனவுகளை கண்டிருந்த
நாட்களை நகரவிட்டு
நினைவுகளின் நிர்பந்தத்தில்
நிலைகொண்டுள்ளேன்
வாழ்வில்
எங்கெல்லாமோ
நிம்மதியைத் தேடித்தொலைத்து விட்டு
எனக்குள்ளே இருப்பதை தோண்டித்துருவி
சுவைத்துக் கொண்டே இருப்பேன்

ராஜா வாவுபிள்ளை

No comments: