Tuesday, October 11, 2016

அந்த அழகை வார்த்தைகளில் சொல்வது கடினம் என்றாலும்

அன்புடன் புகாரி
கடந்த ஞாயிறு இலையுதிர்கால மரங்களின் எழிலைக் காணச் சென்றிருந்தேன். அந்த அழகை வார்த்தைகளில் சொல்வது கடினம் என்றாலும் நான் 2003ல் ஒரு கவிதையே எழுதினேன். அது இதோ
பச்சைத் தாவர
இலைகளின் நரம்புகளில்
பஞ்சவர்ணக் கிளியின்
இரத்தம் பாய்ச்சிப்
பரவசம் பொங்கப்
படபடக்க வைப்பதாரோ
நானறியேன்
மஞ்சளும் சிகப்பும்
முதற்காம மஞ்சத்தில்
ஒன்றுக்குள் ஒன்று
குதித்தெழுந்தால் வரும்
கிளுகிளுப்பு நிறங்களில்
எழிலாய்ச் சிரிக்கும்
இலைகளே இலைகளே!

நீங்கள்
இதயத்துக்குள்
இறக்குமதி செய்யும்
இனிப்பெல்லாம் - என்
இமைக்கூட்டுப் பறவைகள் - ஒரு
கனவாய்க் காணவும் முடியாத
சொர்க்க வெளிக்கல்லவா
இதயத்தை
ஏற்றுமதி செய்கின்றன
அடடா....
இலையுதிர் காலம் என்பது
ஒரு தரமான வரமென்பதில்
சந்தேகமில்லை
மரங்களுக்குக் கிடைத்த
இந்தப் பேறு
மனிதர்களுக்கும் வேண்டும்!
காலம்
கறுப்புச் சுமையேற்றும்
கொடிய கணங்களிலெல்லாம்
கவலைக்குள் கசங்கும்
கண்ணீர் இலைகளை
ஒவ்வொன்றாய்
நிறச் சீர்வரிசைகளோடு
நிலம்மீது உதிர்த்துவிட்டு
தன் உர உயிர் உடைந்துவிடாமல்
இயற்கையை எதிர்த்து நிற்கும்
அற்புத வாழ்வல்லவா - இந்த
மரங்களுக்கு வாய்த்திருக்கிறது!
பின்
காலம் கும்பிடுபோடும்
குதூகலப் பொழுதுகளில் - மீண்டும்
புத்தம் புதிதாய்
இலைச் சிறகுகளைப்
பூட்டிக்கொள்ளும்
பூரிப்புத் திருவிழா - என்றும்
காணக் கண்கொள்ளாக்
காட்சியல்லவா?
இலைகள் பூக்களாகும்
இந்தப் பொற்பொழுதுகளில்
அதில் நனையத் துடிக்கும்
வேகத்தோடு
பூமி மத்தளத்தில்
மேளம் கொட்ட நீண்டுவரும்
மழையின் மந்திர விரல்கள்
மெல்ல மெல்லத்
தட்டித் தட்டி - பின்
காதல் இமைகள் அடிக்கும்
கடும் வேகத்தில்
கொட்டிமுழங்கும் கொண்டாட்டம்
தன் நீர் இலைகளையும்
உதிர்கின்றனவோ - இந்த
இலையுதிர்க்கால மேகங்கள்?
இவ்வேளையில்
காற்றுக்கு
அவசரச் செய்தி அனுப்பியது
யாரென்ற புலன்விசாரனை
பிசுபிசுத்துப் போக
உய்ய்ய்ய்யென்று கூவிக்கொண்டு
ஓடி வருகிறது காற்று
அது
கிளைகளில் அமர்ந்து
இலைகளின் காதுகளில்
எதையோ கிசுகிசுக்க
நாணக் குடம் கவிழ்ந்து
மேலும் சிவக்கின்றன
இலைக்குமரிகளின்
ஈர அங்கங்கள்
இந்த
இனிய காலத்தில்
அலுவலகம் நோக்கி
வாகனம் ஓட்டிச் செல்லும்
அகண்ட பெரும் தார்ச்சாலையில்
வானம் தெரிகிறது எனக்கு
நட்சத்திரங்களாய்க்
கொட்டிக்கிடக்கும்
வண்ணவண்ண இலைகளின்
வசீகரப் புன்னகையால்!
* (அக்டோபர் 2003)

அன்புடன் புகாரி

No comments: