Monday, March 23, 2020

கொரோனா கொரோனா / கவிதை அன்புடன் புகாரி

கொரோனா கொரோனா

வில்லும் நானே
அம்பும் நானே

துப்பாக்கியும் நானே
தோட்டாவும் நானே

காற்றிலும் சுழல்வேன்
கைப்பிடியிலும் காத்திருப்பேன்

இந்த
மானிட உலகமே
கண்ணுக்குத் தெரியாத
என் காலடியில்


மனித உயிர்த் தாகம்
வெறிகொண்ட என் மோகம்

தேடித் தேடித் திரிகிறேன்
தென்படுவோரையெல்லாம்
தின்று செரிக்கிறேன்

கோவில் சென்றேன்
ஒருவரையும் காணவில்லை

தேவாலயம் சென்றேன்
தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை

பள்ளிவாசல் சென்றேன்
அங்கேயும் ஏமாற்றம்

எங்கே எங்கே
என் மனிதத் தீனிகள்
எங்கே என்று
வீடுகள் நோக்கி ஓடினேன்

அடடா
வீட்டுக்குள் மட்டும்
என்னால்
நுழையவே முடியவில்லையே

வாசலிலேயே
கழற்றி எறியப்பட்ட
கையுரைகளில்
கதறிக் கிடக்கிறேன்

வீதிகளில் நடந்த
ஓரிருவரைத் தொற்றிக்கொண்டு
வீட்டின் கதவுகள் திறந்து
விட்டேனா பார் என்ற வெறியோடு
உள்ளேயே நுழைந்துவிட்டேன்

அய்யகோ
அவசரமாய் அவர்கள்
கையை கழுவி கையைக் கழுவி
என் கழுத்தை அறுத்துப்
போட்டுவிட்டார்களே

யார் சொல்லித் தந்தார்
இந்தத் தந்திரத்தை

எங்கே கற்று வந்தார்கள்
இந்த மந்திரத்தை

ஆயினும்
என் வெற்றிக்காக
நான் அவர்களின்
வாசலிலேயே காத்திருக்கிறேன்

காற்றில் என் மூச்சு
சில மணிநேரம் தாங்கும்

கைப்பிடிகளில்
என் உயிர்
ஓரிருநாள் நீடிக்கும்

பிளாஸ்டிக் பொருட்களில்
என் ஆயுள்
ஒரு வாரமாவது நீளும்

ஆனால்
கதவடைத்தவர் எவரும்
வெளியில் வரவே இல்லையே

தொற்றியவனிடமிருந்து
ஊரையே தொற்றலாம் என்றால்
இந்த முகமூடி தடுக்கிறதே

இதுதான் என் கதியா
இன்னும் பதினைந்தே தினங்களில்
நான் இந்த உலகைவிட்டே
அழிந்துபோவேனா

இறைவா
இது என்ன உன் சதியா
என்று கர்ஜிக்கிறேன்

அவனோ
மனிதர்களுக்கு
நான் சுயமாய்ச் சிந்திக்கும்
அறிவைத் தந்திருக்கிறேனே
என்று நகைக்கிறான்

அன்புடன் புகாரி

No comments: