Tuesday, March 24, 2020

"மார்க்கெட்டுக்கு போனேன்.." கம்பாலாவிலிருந்து Saif Saif

Saif Saif
இன்று காலையில் இங்குள்ள மார்க்கெட்டுக்கு போனேன்..

மார்க்கெட்டில் கூட்டமில்லை.. பெரிய கடைகள் எதுவும் திறக்கவில்லை..பேங்கில் கூட்டமில்லை.. ரோட்டில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து விட்டது..

வியாபாரிகள் கொரோனா பற்றி பேசுகிறார்கள்..

சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த சிலர் விலையை கூட்டி விற்கிறார்கள்..

ஆனால் மார்க்கெட்டில் உள்ள இங்குள்ளவர்கள் இப்படி செய்வது இல்லை.. காய்கறிகள் வாங்கும் போது கூடுதலாக
தான் நிறுவையில் நிறுப்பார்கள்.. அவர்களிடம் பணம் இருக்குதோ இல்லையோ மனசு தாராளம் இருக்கிறது..


பல கடைகள்,
பேங்க் முன்னால்
தண்ணீர் கைகழுவும்
லோசன் எல்லாம் வைத்திருக்கிறார்கள்..

பலர் முகத்தில் ஒருவித பீதி உறைந்து கிடக்கிறது..

முன்பு கம்பாலாவில் தீப்பெட்டி பில்டிங்கில் இருந்த சமயம் நிலநடுக்கத்தில் கட்டிடம் ஆடிய போது "யா நப்ஸி" என்று உயிரை காப்பாற்றிக் கொள்ள பலரும் ஓடியது நியாபகம் வருகிறது..

அந்த மனநிலை அந்த நிமிடம் அந்த ஒருநாள் மட்டும் தான்.. ஆனால் இப்போது அப்படியல்ல இந்த வைரஸ் யாரை தாக்கும் எப்படி தாக்கும் என்று உலகமே உறைந்து போய் கிடக்கிறது..

மனிதன் பல பிளான்களை போட்டு பார்க்கிறான்..

ஆனால் அல்லாஹ்
என்ன பிளான் போட்டிருக்கிறானோ தெரியவில்லையே...!?

அவன் நாடினால் உங்களை அழித்துவிட்டு (அந்த இடத்தில்) ஒரு புதிய படைப்பைக் கொண்டு வருவான்..(14:19)

இப்படியும் அவனது
திட்டம் இருக்கலாமோ..!?

அவனது நாட்டம்
போல் நடக்கட்டும்..

அவனுக்கு எல்லாம் தெரியும்.. அவனும் ஒரு டார்கெட் வைத்திருப்பான் அல்லவா..!?

அந்த டார்கெட் வருவது வரை நம்மால் எதுவும் செய்ய முடியாது..

தன் திருமறையில்
கூட அப்படி தான் சொல்கிறான்..

அவர்கள் கொடுமை செய்தபோது, அவர்களை நாம் அழித்து விட்டோம். அவை ஒவ்வொன்றின் அழிவிற்கும் குறிப்பிட்ட தொரு காலத்தை நிர்ணயித்து இருந்தோம்.(18:59)

இறைவனின் திட்டம் எதுவாக இருந்தாலும்
நாம் நம் பிரார்த்தனைகளை
விடாது தொடர்வது
மிக அவசியம்..

ஆயிஷா (ரழி) கூறுவதாக ஒரு ஹதீஸ்..

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது அபூபக்ர், பிலால் (ரழி) ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. நான் அவர்களிடம் சென்று தந்தையே தாங்கள் எப்படி இருக்கின்றீர்கள்?
பிலாலே தாங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? என்று கேட்டேன்.

பொதுவாக
அபூபக்ர் (ரழி) அவர்களுக்கு காய்ச்சல்
ஏற்பட்டால்,

“ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் கலந்திருக்க...
மரணமோ அவனது செருப்பு வாரைவிட மிகச் சமீபத்தில் இருக்கிறது”

என்று கூறுவார்கள்.

பிலால் (ரழி) அவர்களுக்கு காய்ச்சலின் சூடு சற்று குறைந்தால் வேதனையுடன் குரலை உயர்த்தி,

“இத்கிர், ஜலீல் எனும் புற்கள் என்னைச் சூழ்ந்திருக்க,
அது போன்றதொரு பள்ளத்தாக்கில் ஓர் இராப்பொழுதையேனும் நான் கழிப்பேனா?
ம்மஜின்னா’ எனும் (சுனையின்) நீரை
நான் அருந்துவேனா?
ஷாமா, தஃபீல் எனும் இரு மலைகள் எனக்குத் தென்படுமா?”

என்று கூறுவார்கள்.

தொடர்ந்து ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்:

நான் நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தியைக் கூறினேன்.

நபி (ஸல்) அவர்கள்
இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்கு! இங்குள்ள காய்ச்சலை மாற்றிவிடு!” என்று பிரார்த்தனை செய்தார்கள்.

அபூபக்கர்(ரலி) அவர்கள் சொன்னது போல் மரணம் செறுப்பு வாரை விட
மிக சமீபத்தில் தான் இருக்கிறது. எத்தனை உண்மை..

இறைவன் தன் திருமறையில்
அச்சத்தாலும்,
பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம் என்று சொல்கிறான்..

எத்தனையோ ஊர்களை அவர்கள் செய்த பாவங்களினால் நாம் அழித்து விட்டிருக்கின்றோம். என்றும் சொல்கிறான்..

அந்த ஊர் மக்கள் தங்களுடைய அதிகப்படியான வாழ்க்கை வசதிகள் குறித்து கர்வம் கொண்டிருந்தார்கள்.
(இதோ! பார்த்துக்கொள்ளுங்கள்) இவை அவர்கள் குடியிருந்த இல்லங்கள். இவற்றில் அவர்களுக்குப் பின்னர் யாருமே வசிக்கவில்லை ஒரு சிலரைத் தவிர!
இறுதியில் நாமே வாரிசுகளாகிவிட்டோம்.
என்றும் சொல்கிறான்.

இது போன்ற நிலை இப்போதும் தொடரத் தானே செய்கிறது..

ஆனால் கூடவே மனசுக்கு
நிம்மதியான ஒரு செய்தியும் வருகிறது..

உம் இறைவன் எந்த ஊரையும் அவ்வூர் மக்கள் சீர்திருத்தம் புரிவோராய் இருக்கும் நிலையில், நியாயமின்றி அழித்துவிடக் கூடியவன் அல்லன்.(11:117)

நல்ல காரியங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்..

கூடவே இந்த வேளையில்
மூஸா நபி அவர்கள்
செய்த பிரார்த்தனையை பாவமன்னிப்பை
நாமும் கேட்பது அவசியம்.

கடும் பூகம்பம் அவர்களைத் தாக்கியபோது மூஸா இறைஞ்சினார்:

“என் இறைவனே!
நீ நாடியிருந்தால் அவர்களையும் என்னையும் முன்பே அழித்து விட்டிருக்க முடியும்! எங்களில் சில அறிவிலிகள் செய்த தவறுகளுக்காக எங்கள் அனைவரையும் அழிக்கப் போகின்றாயா? இது உன்னுடைய சோதனையே அன்றி வேறில்லை.
இதன் மூலம் நீ நாடுகின்றவர்களை வழிகெடுக்கிறாய். இன்னும் நீ நாடுகின்றவர்களுக்கு நேர்வழியைக் காண்பிக்கின்றாய்.
எங்கள் பாதுகாவலன் நீயே! எனவே எங்களை மன்னித்து, மேலும் எங்கள் மீது கருணை புரிவாயாக! நீ எல்லோரையும் விட அதிகம் மன்னிப்பவனாய் இருக்கின்றாய்.”(7;155)

நாமும் கருணை
மிகுந்த இறைவனை வேண்டுவோம்..

எங்கள் இறைவனே.. எங்கள் பாவங்களை மன்னித்து எங்கள் மீது கருணை புரிந்து கண்ணுக்கு தெரியாத இந்த கொடிய வைரஸ் கொரோனாவை விட்டு எங்களையும் உலக மக்கள் அனைவரையும் பாதுகாப்பாயாக.. ஆமீன்..

No comments: