Saturday, February 22, 2020

''கூடைக்குள் என்ன இருக்கிறது? டன் கணக்கில் பொன் 🕵


முல்லா வசித்து வந்த நாட்டிற்கு பக்கத்து நாடு ஒன்றிற்கு கோழி முட்டைகளை எடுத்துச்செல்வது தடை செய்யப்பட்டிருந்தது, இதை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். இதனால் அந்த நாட்டில் கோழி முட்டைகளுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது.

இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட முல்லா, அந்த நாட்டின் காவலர்களுக்கு தெரியாமல், கோழிமுட்டைகளை எடுத்துச் சென்று, விற்பனை செய்து, நல்ல லாபம் அடைந்து வந்தார்.

ஒரு நாள் இப்படி வழக்கம்போல முட்டைகளை அவர் எடுத்துச் சென்ற போது, அந்நாட்டு காவலர்கள் அவரைப் பார்த்து விட்டார்கள். உடனே முல்லாவை அழைத்து,

''கூடைக்குள் என்ன இருக்கிறது? எனக் கேட்க, ''கோழிக்குஞ்சுகள் இருக்கின்றன'' என முல்லா பதிலளிக்க, அதற்கு அந்த காவலர்கள், "முட்டைகளுக்குத்தான் தடை கோழிக்குஞ்சுகளை தாராளமாக கொண்டு போகலாம், இருப்பினும் எங்கள் மேலதிகாரி வந்ததும் அவரிடம் சொல்லிவிட்டு செல்லுங்கள்" என முல்லாவை நிற்க வைத்தனர்!


மேலதிகாரி வருகிறார்... அவரிடம் காவலர்கள் விபரம் தெவிக்கிறார்கள்! இப்போது அந்த அதிகாரி "சரி.. உங்கள் கூடையை திறந்துகாட்டிவிட்டு செல்லுங்கள்" என்று முல்லாவை பார்த்து சொல்கிறார்!

முல்லா கூடையை திறக்கிறார் ஆனால் சொன்னதுபோல் கூடைக்குள் கோழிக்குஞ்சுகள் இல்லை, முட்டைகள்தான் இருந்தன!

இதைப்பார்த்த அதிகாரியும், காவலர்களும் திடுக்கிட்டு முல்லாவிடம் கேட்கிறார்கள்... "இப்படி நீங்கள் பொய் பேசலாமா..? ஒரு பெரிய மனிதர் செய்யும் காரியமா இது"..? அதற்கு முல்லா சொல்கிறார்.. "நான் பொய் ஒன்றும் சொல்லவில்லையே உண்மையைத்தானே சொன்னேன்"...!

"அதிகாரி அவர்களே கோழிக்குஞ்சுகள் எங்கிருந்து வருகின்றன..? அதற்கு அவர் சொன்னார் "முட்டைக்குள்ளிருந்து"... "அப்போது நான் கொண்டுவந்த முட்டைகளில் குஞ்சுகள் இருப்பது உண்மைதானே".? என முல்லா திரும்பவும் கேட்க வாயடைத்து போனார் அந்த அதிகாரி🙄

Samsul Hameed Saleem Mohamed

No comments: