Thursday, April 26, 2018

டாக்டர் ஆத்மராமும் இஸ்லாமும்


உணர்வு: உங்களைக் குறித்து சிறு அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்!

ஆத்மராம்: நான் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிராமண வைசிய குலத்தில் பிறந்து, மிகச்சிறு வயதிலேயே சென்னை வந்து கோபாலபுரத்தில் வளர்ந்தவன். எனது பள்ளிப் படிப்பு கல்லூரிப் படிப்பு எல்லாம் சென்னையில் தான். லயோலா கல்லூரியில் படித்த நான் 'ஸ்டேட் பர்ஸ்ட் அவுட் கோர்ஸ்' மாணவனாக தேர்வு பெற்றேன். அடுத்து ஐ.ஐ.டி.யில் படித்து பி.டெக் பட்டம் பெற்றேன். ஐ.ஐ.டி.யில் எனது படிப்பு முடிந்ததுமே அமெரிக்காவில் உயர்கல்வி யும், வேலை வாய்ப்பும் பெறுவதற்கான 'விசா' எனக்குக் கிடைத்தது. 19 வயதிலேயே 1965ல் அமெரிக்காவுக்கு முதன்முதலில் சென்ற நான் இன்று அமெரிக்க குடியுரிமை பெற்றவனாக உள்ளேன்.
அமெரிக்காவில் நான் உயர்கல்வி படித்து எம்.எஸ்.ல் தேறியதும், 3 துறைகளில் ஆய்வு செய்து பி.எச்.டி. செய்து, டாக்டர் பட்டம் பெற்றேன். மேலும் நான் உலகளாவிய அளவில் மிக உயர்ந்த அந்தஸ்துகள் பலவற்றை பெற்றுள் ளேன். அமெரிக்க விண்வெளி ஆய்வுக்கழகமான 'நாஸா'வில் கவுரவ உறுப்பினராகவும், ஐ.நா கல்விக் கழகத்தில் பேராசிரியராகவும் 25 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளேன். ஐ.எம்.எஃப். என்ற சர்வதே நிதி அமைப்பு மற்றும் 'உலக வங்கி' ஆகியவற்றில் தலா மூன்றரை ஆண்டுகள் சிறப்பு உறுப்பினராகவும், ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரக் கொள்கை அமைப்பு காரியதரிசி போன்ற பல பொறுப்புகளை வகித்துள்ளேன். இஞ்சினியரிங் துறையில் 41 புத்தகங்களை எழுதியுள்ளேன். எனது புத்தகங்கள் உலகில் பல நாடுகளிலும், பல்கலைக் கழகங்கள் பலவற்றிலும் பாடப்புத்தகங்களாக வைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ உட்பட உலகப் புகழ்பெற்ற பல பிரபலங்கள் எனது மாணவர்கள்... பிர்லா கோளரங்கத்தின் சாஃப்ட்வேர் எனது ஆலோசனைப்படி அமைக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் இன்று கோடிக்கணக் கானோர் அன்றாடம் பயன்படுத்தும் செல்போன் சாஃப்ட்வேரை முதன் முதலில் தயாரித்து வழங்கியது நான் தான் என்றும், அதைத்தான் பரவலாக அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள் எனவும் பல விபரங்களைக் கூறி நம்மை திகைக்க வைத்தார்.

உணர்வு: உங்களுக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

ஆத்மராம்: நான் உட்பட 16 மாணவர்கள் முதன் முதலாக அமெரிக்கா சென்ற போது அங்குள்ள விதிமுறைகள் சரிவர தெரியாத தால், சில காரணங்களால் அமெரிக்க போலிசாரால் கைது செய்யப்பட்டோம்.... அப்பொழுது அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 'நுஸ்ரத் அலி' என்பவர், நான் தமிழ் பேசுவதைப் பார்த்து என்னை அணுகி, ''நீ மதராஸ்காரனா? நானும் நாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவன் தான். இந்திய நாடு பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் சென்ற நான் இப்போது அமெரிக்க பிரஜையாக உள்ளேன். கவலைப்படாதே'' என ஆறுதல் கூறி என்னையும், என்னுடன் சேர்ந்து கைதான வர்களையும் நீதிமன்றத்தின் மூலம் விடுதலை பெற உதவி செய்தார். மேலும், அவரது வீட்டிற்கு அழைத்து தங்க வைத்து பலவித உதவிகளைச் செய்தார். அவர் மூலமாக இஸ்லாம் குறித்த அறிமுகம் உண்டானது. மேலும் நான் முதன்முதலில் பி.எச்.டி. ஆய்வில் தேறியதும் எனக்கு, டாக்டர் பட்டம் தருவதற்கு பரிந்துரை செய்தவர் எனது பேராசிரியரான 'இர்ஷத் அலி' என்ற முஸ்லிமே ஆவார். அவர் அன்று செய்த உதவியால்தான் இன்று நான் பல்வேறு உயர்வுகளை அடைய முடிந்தது. இதன் வாயிலாக இஸ்லாம் பற்றி மேலும் அறிய முற்பட்டு, பல்வேறு நூல்களை படித்து தேறினேன். அடிப்படையில் நான் பிராமண வைசிய குலத்தில் பிறந்ததால் இயல்பாகவே ஏகத்துவக் கொள்கை மீது எனக்கு ஆர்வம் உண்டு. எங்களது குல தெய்வம் 'ஒப்பிலி அப்பன்' என்பதாகும். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள ஒப்பிலி அப்பன் கோவிலில் உள்ள சிலையில் ஏகத்துவ கொள்கையை வலியுறுத்தும் 'மா ஏகம் சரணம் வ்ரஜா' என்ற மந்திரம் பொறிக்கப்பட் டுள்ளது. அதிலிருந்தே நான் ஏகத்துவக் கொள்கையை ஆய்வு செய்யத் தொடங்கி னேன். மேலும், சகோதரர் பிஜேயின் பிரச்சாரத்தை தொலைக்காட்சி வாயிலாக பார்க்க ஆரம்பித்தது முதல் ஏகத்துவக் கொள்கையில் உறுதி ஆகிவிட்டது.

உணர்வு: இதைச் சற்று விளக்கமாக கூறுங்களேன்...

ஆத்மராம்: 2001ம் ஆண்டு என நினைக்கிறேன். நான் அமெரிக்காவில் எனது அலுவலகத்தில் சேட்டிலைட் சேனல்கள் ஒவ்வென்றையும் ஆய்வு செய்து கொண்டிருந் தேன். அமெரிக்காவில் ஃப்ரீ சேனல்கள் மட்டுமே 250க்கும் மேல் இருக்கும். மேலும் 'கட்டண சேனல்'கள் வேறு பலநூறு இருக்கும். அவற்றை நான் ஆய்வு செய்து கொண்டிருக் கும் போது திடீரென்று ஒரு தமிழ் குரல் கேட்டது. அந்தக் குரலின் வசீகரம் என்னை கவர்ந்தது. அந்தச் சேனலை டியூன் செய்தேன். அது விண் டிவி என நினைக்கிறேன். அதில், பிஜே அவர்களின் பேச்சை முதன்முதலில் கேட்டேன். அதில் இதன் தொடர்ச்சி நாளை தொடரும் என பாக்கர் அறிவிப்பார். அப்போது தான் அவர்கள் முதன்முதலில் எனக்கு அறிமுகம். அதன் பிறகு பிஜேயின் நிகழ்ச்சி களை தொடர்ந்து பார்த்து ஏகத்துவத்தையும், இஸ்லாத்தின் சிறப்புகளையும் நல்ல முறையில் உணர்ந்து கொண்டு வருகிறேன். நான் 2001 நவம்பர் மாதம் முதன்முதலில் பிஜேயுடன் தொலைபேசி வாயிலாக பேசினேன். அப்புறம் அடிக்கடி அவரிடம் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்று வருகிறேன். நான் உலகின் பல நாடுகளுக்கும் சென்ற போதும் பிஜேயுடன் தொலைபேசி வாயிலாக உரையாடி உள்ளேன். அந்த உறவு இன்று வரை தொடர்கிறது.

உணர்வு: பிஜேயின் கேள்வி நேரத்தின் போது உங்களுக்கு மட்டும் தொலைபேசி இணைப்பு உடனடியாக எப்படி கிடைக்கிறது?

ஆத்மராம்: அது மட்டும் ரகசியம்.... தலைவர் பி.ஜே.யும், பாக்கரும் கூட இது குறித்து என்னிடம் கேட்டார்கள். அது தொலைபேசி தொழில்நுட்ப ரகசியம் என்பதே எனது பதில். நான் தற்போது 9 மாத விடுமுறையில் எனது அலுவல் விஷயமாக இந்தியா வந்துள்ளேன். ஒரு நாள் எதேச்சையாக விண் டிவி பார்க்கும் போது பிஜேயின் கேள்வி நேரம் ஒளிபரப்பானது. அது முதல் வாராவாரம் அவருடன் உரையாடி வருகிறேன்.

உணர்வு: குடந்தை மாநாட்டில் உங்கள் அனுபவத்தைக் கூறுங்களேன்?

ஆத்மராம்: தவ்ஹீது ஜமாஅத்தின் அன்பான அழைப்பை ஏற்று குடந்தை பேரணிக்கு குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டேன். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்ட அந்த அற்புத நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். பலவிதங்களிலும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயம் எங்களைப் போன்று முன்னேறிய சமூகமாக மாற இட ஒதுக்கீடு மூலமே முடியும். அது விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பிஜே பொதுச் செயலாளர் பாக்கர் மற்றுமுள்ள நிர்வாகிகளின் வழிகாட்டல் படி முஸ்லிம்கள் உரிமையைப் பெறுவது உறுதி!

உணர்வு: ஏகத்துவத்தை நன்கு உணர்ந்தாக கூறும் தாங்கள் இன்னும் உருவ வழிபாடு செய்கிறீர்களா. பிறப்பின் அடிப்படை யில் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்ற கொள்கையை ஒப்புக் கொள்கிறீர்களா?

ஆத்மராம்: மனுநீதி அடிப்படையிலான சாதி அமைப்பு முறை நல்ல நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் நாளடைவில் அதன் நோக்கம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று உலகில் பிராமணர்கள் என்று கூறிக் கொள்ளும் எவரும் மனுநீதி குறிப்பிடும் பிராமணர் ஆகமாட்டார்கள். எனவே பிராமணர் என்று யாரும் இல்லை. பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கூடாது. உருவ வழிபாடு ஆன்மீகத்தின் ஓர் அங்கமே! சாதாரண மக்கள் இறைவனை அடைவதற் கான ஒரு எளிய முயற்சிதான். எப்படி எல்லா நதிகளிலும் கடலில் சென்று கலக்கிறதோ அது போன்றே வழிபாட்டு முறை பலவாறாக இருந்தா லும் கடவுளை அடைவதே நோக்கமாகும். நான் உருவ வழிபாட்டை தவிர்த்து வருகிறேன். உருவமற்ற வழிபாட்டு முறை ஆன்மீகத் தின் உயர்ந்த படித்தரம் எனினும் அதனை எல்லோராலும் பின்பற்ற முடியாத நிலையே உள்ளது. ஒவ்வொருவரும் அதை உணர்ந்து திருந்தினால்தான் தடுக்க முடியும். நாளடை வில் அது குறைந்து விடும். படித்தவர்களால் மட்டுமே அது சாத்தியம். நான் படித்தவன் என்பதால், இறைவன் நாடினால் இஸ்லாத்தை முழுமையாக கடைபிடிக்கக் கூடியவனாக மாறுவேன்...

அவரது நேர்வழிக்காக நாமும் பிரார்த்திப்போமாக!

அமெரிக்காவில் நாசாவில் பணியிலிருக்கும் விஞ்ஞானி ஆத்மராம் என்ற பிராமணர் அண்ணன் பிஜேயின் சொற்பொழிவுகளை இணையத்தின் மூலமாக கேட்டு தெளிவடைகிறார். சென்னை வந்த அவர் அண்ணன் பிஜேயை அலுவலகத்தில் நேரில் சந்தித்து 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை தருகிறார்.

'என்ன இது?' - பிஜே

'எங்கள் வழக்கப்படி இது குரு தட்சணை. இறைவனை எவ்வாறு நெருங்குவது அதன் வழி முறைகள் என்ன என்பதை பல இடங்களில் தேடி அலைந்தேன். எங்கு சென்றாலும் எனது மனம் ஒரு நிலை கொள்ளாமல் தவித்தது. முடிவில் உங்களின் ஆன்லைன்பிஜே வெப் சைட் கிட்டியது. அதன் மூலம் பல அரிய உண்மைகளை தெரிந்து கொண்டேன். எங்கள் மதத்தில் எங்களின் வேத புத்தகத்தில் உள்ள பல செய்திகள் குர்ஆனிலும் இருப்பதை தெரிந்து கொண்டேன். குழப்பமடைந்த என் மனம் இன்று ஒரு தெளிவான நிலைக்கு வந்துள்ளதென்றால் அதற்கு நீங்களும் ஒரு காரணம். எனவே இந்த சிறிய அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்' - ஆத்மராம்.

'நான் இது போன்ற அன்பளிப்புகளை வாங்குவதில்லை. உங்களுக்கு ஏதும் கொடுக்க விருப்பமிருந்தால் அனாதை இல்லம், முதியோர் இல்லம் போன்ற இல்லங்களை தவ்ஹீத் ஜமாத் என்ற எங்கள் இயக்கம் மூலம் நடத்தி வருகிறோம். அதற்கு இந்த தொகையை கொடுத்து ரஷீது பெற்றுக் கொள்ளுங்கள்' - பிஜே

இதனை சற்றும் எதிர் பார்க்காத ஆத்மராம் பிஜே யின் மதிப்பு தன் அளவில் மேலும் உயர்ந்துள்ளதாக கூறியதைப் பார்க்கிறோம். புத்தகங்களின் மூலம் வரும் வருமானமும், சென்னை மண்ணடியில் அவர் வைத்துள்ள கடையின் வருமானமும் தான் அவரது குடும்பத்தை நடத்துகிறது. அந்த கடையின் மூல தனம் கூட தொண்டியில் உள்ள தனது பூர்வீக சொத்தை விற்று அந்த பணத்தில் உருவாக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

http://suvanappiriyan.blogspot.com/2018/04/blog-post_26.html

No comments: