Saturday, December 19, 2020

“அல்லாஹ்வை நாம் தொழுதால்”

 

Maruthamunai S.M. Kamaldeen

🎵பாடல்: “அல்லாஹ்வை நாம் தொழுதால்

🖋️வரிகள்: கவிஞர் நாகூர் சாதிக்

🎤பாடியவர்: இசை முரசு நாகூர் . எம். ஹனீபா

அல்லாஹ்வை நாம் தொழுதால்சுகம்

எல்லாமே ஓடி வரும்அந்த

வல்லோனை நினைத்திருந்தால். – நல்ல

வாழ்க்கையும் தேடி வரும்

பள்ளிகள் பல இருந்தும்

பாங்கோசை கேட்ட பின்பும்

பள்ளி செல்ல மனம் இல்லையோ

படைத்தவன் நினைவில்லையோ

(அல்லாஹ்வை நாம் தொழுவோம்…)

வழி காட்ட மறை இருந்தும்

வள்ளல் நபி சொல் இருந்தும்

விழி இருந்தும் பார்ப்பதில்லையோ

செவி இருந்தும் கேட்பதில்லையோ

(அல்லாஹ்வை நாம் தொழுவோம்…)

இறையோனின் ஆணைகளை

இதயத்தில் ஏற்றிடுவோம்

இறைத் தூதர் போதனையை

இகம் எங்கும் பரப்பிடுவோம்

கவிஞர் இந்தப் பாடலில்அல்லாஹ்வை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்என்ற மெஸேஜை முதற்கண் வெளிப்படுத்திவிட்டுஏன் நீங்கள் பள்ளி செல்ல மாட்டேன் என்கிறீர்கள்?

உங்களுக்கு என்ன பிரச்சினை?

பாங்கு சப்தம் கேட்கவில்லையா?

அல்லது பள்ளிவாயில் செல்வதற்கு அலுப்பு ஏற்படுகின்றதா?

அல்லது படைத்த இறைவனையே மறந்து போய் விட்டீர்களா?

என்று சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுக்கின்றார். பாடலைக் கேட்பவனின் மனதில் ஒரு சிந்தனை ஊற்றை கிளப்பி விட்டு விடுகின்றார்.

அவனும் யோசிக்க ஆரம்பித்து விடுகின்றான். “ஆமாம். சரிதான். நாம் ஏன் பள்ளி செல்வதில்லை? என்ன காரணத்தினால் இருக்கும்? என்று தனக்குத்தானே கேள்வியினால் வேள்விகளை நடத்திக் கொள்கின்றான். கேட்பவனை சிந்திக்க வைப்பதுதான் ஒரு கவிஞனின் தலையாய பணி. நம் கவிஞர் அந்த வேலையை மெச்சத் தகுந்த விதத்தில் கனகச்சிதமாக சிரத்தையோடு செய்து முடிக்கிறார்.

கவிஞர் அத்தோடு அவனை விட்டு விடவில்லை. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்து அவனுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்து விடுகின்றார். “உனக்கு வழிகாட்ட திருமறை இருக்கின்றது. மேலும் உன் சந்தேகங்களைத் தீர்த்து வைக்க நபிபெருமானின் நல்லுரையாம்ஹதீஸ்இருக்கிறது. “அடப்பாவி! நீ கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய் இருக்கின்றாயே?” என்று சரமாரியாகஅறிவுரைதர ஆரம்பித்து அவனை தன் வழிக்கு கொண்டு வந்து விடுகிறார்.

ஒரு வினாவையும் எழுப்பிவிட்டு அதற்கான விளக்கத்தையும், தெளிவான தீர்வையும் கொடுக்காதவன் உண்மையான கவிஞனல்ல என்பது என் அபிப்பிராயம்.

இறுதியில் அதற்கான ஒரு தீர்வையும் கவிஞர் நாகூர் சாதிக் இப்பாடலில் தருகிறார். ஆண்டவன் கட்டளையை அடிமனதில் ஏற்றி அகிலமெங்கும் அண்ணல் நபியின் போதனையை பரப்புவதுதான் பிரச்சினைகள் தீர ஒரே வழி என்று ஒரேயடியாக முத்தாய்ப்பாய் முடித்து விடுகிறார். அவரது பாடல் வெற்றியின் பரமரகசியம் இதுதான்.

இந்த பாடலின் வரிகளை ஒருமுறை கூர்ந்து கவனித்தால் நான் சொல்வது உண்மையென விளங்கும். இப்பாடலில் உள்ள சொற்பதங்கள், -சிறுவர் முதல் பெரியோர் வரை, படித்தோர் முதல் பாமரன் வரை- எல்லோரும் புரிந்துக் கொள்ளும் வகையில் எளிய நடையில் கையாளப்பட்டுள்ளது.

அரபுமொழி சொற்கள் அதிகமாக இடம்பெறும் பாடல்கள் பிறமதத்தவரை அதிகம் சென்றடைவதில்லை. ஆனால் இந்த பாடல் அறிமுகம் ஆனபோது எல்லா மதத்தவரும் முணுமுணுத்ததை நாம் செவிமடுக்க முடிந்தது. காரணம் எளிமையான எந்தமிழ் வார்த்தைகள்.

No comments: