Thursday, December 17, 2020

சிருஷ்டியும்.....சமிக்ஞையும்.....!

 

* சிருஷ்டியும்.....சமிக்ஞையும்.....!



Sothugudiyan

* உணர்வுகள், எண்ணங்களை

எழுத்து வழி தருவோர் படைப்பாளியெனக் கருதப்படுகின்றார்!

* எழுத்தை எழுதுவோர் வேறு; எழுத்தை ஆளுபவர் வேறு!

இருவரும் ஒன்றென்று சமர் புரிதலிருக்கின்றது!

* மழைக் கால மின்னலாக தோன்றி மறையக் கூடியன சிந்தனைகள்!

* தன்னுணர்வுத் தளத்தில் காலூன்றியிருப்போர், மறுக்கவியலா அனுபவத்தை ; அனுபவித்தலை; மறைக்கவியலா சமூக அவலங்களைப் பேசலாம், தீர்வு கூறலாம்!

* மரபுகள் வழியாக நவீன உலகினுள் பிரவேசிப்போம்!

* முகந்திருப்பாது; மனஞ் சலியாது பகைப் புலங்களை, கணிப்பீடுகளை எதிர் கொள்வோம்!

* இடைக்கிடையே உயிர்த்தெழுந்து உரசிச் செல்லும் காற்றைப்போல் அக, புற வயப்படுதலிருக்கின்றது!

* ஒன்றியிருக்கவியலாமல் துயரப்படுகிறோம்!

* அரவமற்ற வெளியில் நிற்கும் ஒற்றைப் பனையாக வாழ்வு திணித்தலுக்குள்ளாகின்றது!

* தோள் தரும் முதுகெலும்பின் மீதேறி சமைக்கப்படும் சிம்மாசனம்!

* காற்றும், கனலுமாய்க் கடக்கும் வாழ்வும், மரணமும்!

* உழவு செய்தல், நாற்று நடுதல், களை பறித்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுதல் ஒன்றும் செய்யாது அறுவடைக்கு  அணிவகுத்தல்!

* நீர்மை காய்ந்து போன நெஞ்சங்கள்; உரு மாறிய வாழ்வின் போக்கு!

* மலை மேல் கவிழும் முகிலின் திரள் போல் ஆன அகங்கள்!

* கருத்துகளை சிருஷ்டிப்பவன்;

சமிக்ஞைகள் வழியாக மனங்களில் சதிராடுகிறான்! உரையாடுகிறான்!

* குளிர் அறிதலுக்கும், சூடு உணர்தலுக்கும் அப்பாற்பட்டது ஆன்மா! இருமையில்லாதது!

{சோதுகுடியான் பதிவு:13/12/2020}

No comments: