Monday, December 17, 2018

சிற்றின்பமும் ... பேரின்பமும்....*

ஒரு ஈயும், தேனீயும் ஒரு நாள் வழியில் சந்தித்துக் கொண்டன. ஈ , தேனீயிடம் கேட்டது -நண்பா , சாப்பிட்டு விட்டாயா ?
தேனீ சொன்னது ," இல்லை நண்பா , அதற்காகத்தான் பூக்களைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறேன்.தேனீயின் பதிலைக் கேட்ட ஈ விழுந்து விழுந்து சிரித்தது .
பூமி முழுக்க சுவையான உணவுகள் இறைந்து கிடக்க நீ பூக்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறாயே....?

உனக்குக் கண்களில் கோளாறா இல்லை புத்தியில் கோளாறா....?


அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் கண் முன்னே கொட்டிக் கிடக்க அரிதான விஷயத்தைத் தேடி இவ்வளது தூரம் அலைந்து கஷ்டப்படுகிற உன்னைப் பைத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும் "
என்றது.

தேனீ கோபப்படவில்லை.அமைதியாய் கூறியது ..
உன் கண்களுக்கு இனிய உணவாகவும்,
இன்ப மயமாகவும் காட்சியளிக்கும் சகலமும் , எனக்கு நாற்றம் பிடித்தவையாகவும்,
அருவறுக்கத் தக்கவையாகவும் தோன்றுகிறதே

நான் சேமித்து வைக்கும் என்னுடைய உணவு ஆண்டுகள் பல ஆனாலும் அதே சுவையோடு அப்படியே இருந்து பல பேருக்குப் பயன்படும்.

ஆனால் உன்னுடைய உணவு,
கொஞ்ச நேரத்திலேயே அழுகிப் புழுத்து அழிந்து போகும்.

அத்துடன் உன்னுடைய கூட்டம் மட்டுமே அந்த நாற்றத்தைத் தேடிப் போகும் " என்றது.

ஈ அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாமல் ஓடிப் போனது .

பாவங்களை இன்பமாய்க் கருதி வாழும் சில பிறவிகளின் கண்களுக்குப் பரிசுத்தவான்கள் பைத்தியங்களாய்த் தோன்றுவது இயற்கைதான்.

*சிற்றின்பம் ஈ தேடுவது பேரின்பம் தேனி தேடுவது.....*
அதனால்தான் அந்த இறைவனை அடையும் பேரின்பத்தை தேடிய இறைநேசர்களின் வாழ்க்கையும் , அவர்களின் வார்த்தைகளும் இன்றும் தேனாய் இனித்துக்கொண்டிருக்கிறது
: ==ரமீஸ் பிலாலி==
படித்ததில் பிடித்தது


No comments: