Monday, July 8, 2019

ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தாய்...

Colachel Azheem


கேரள மாநிலம் ஹரிப்பாடு கடற்கரை நகரில் கணவர், ஐந்து பிள்ளைகளுடன் குதூகலமாக வாழ்ந்த வாழ்க்கையில் எதிர்பாராமல் நிகழ்ந்த சோதனைகளையும், வேதனைகளையும் வைராக்கியத்துடன் எதிர்கொண்டு தனது ஐந்து பிள்ளைகளையும் சாதனையாளராக மாற்றியுள்ளார் ஜாஸ்மின்...

லியாக்கத் ஹரிப்பாடு மீனவர் கிராமத்தில் ஐஸ் கம்பெனி வைத்து தொழில் செய்து வந்தவர்.. ஓரளவு வருமானத்தில் ஐந்து பிள்ளைகளுடன் மனைவி ஜாஸ்மினுடன் நிறைவாக வாழ்ந்து வருகையில் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வேதனையில் மரணம் அடைந்து விடுகிறார்..

கணவரையிழந்து செய்வதறியாது ஐந்து பிள்ளைகளுடன் சிறிது காலம் உறவினர்கள் ஆதரவில் வாழ்ந்த ஜாஸ்மினுக்கு முதல் அதிர்ச்சி வங்கியிலிருந்து வந்தது...
கணவர் லியாக்கத் ஐஸ் கம்பெனி நடத்த வாங்கியிருந்த லோன் திரும்ப செலுத்தாததால் குடியிருந்த வீடு ஜப்திக்கு வந்தது...
அன்றிலிருந்து சோதனையும் ஆரம்பமானது..


பிள்ளைகள் படித்து வந்த கான்வென்ட் பள்ளி நிர்வாகம் ஃபீஸ் கட்டாததால் திரும்பி அனுப்பினர்.. அதுவரை யாரிடமும் எதற்காகவும் உதவி கேட்டு பழக்கம் இல்லாத ஜாஸ்மின் தனது பிள்ளைகளை கான்வென்ட் பள்ளியில் இருந்து அரசாங்க பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்...
ஆனாலும் உணவு, உடை என்று ஐந்து பேருக்கு செலவழிக்க போதிய வருமானம் இல்லாத நிலையில் +1 வகுப்பில் படித்த மூத்த மகளை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டு மீதி நான்கு பிள்ளைகளையும் கனத்த மனதுடன் திருச்சூர் பெரும்பிலாவு எதீம்கானாவில் கொண்டு சேர்த்தார்...

அடுத்தாண்டு +2 ல் அதிக மதிப்பெண் பெற்று தேறிய மூத்த மகள் சியானா கேரள மருத்துவ நுழைவு தேர்வில் 161 வது ரேங்கில் தேர்ச்சி பெற்று கோட்டயம் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்து அனஸ்தீஸியா முதுகலை படிப்பும் தேர்ச்சி பெற்று ஜாஸ்மின் முகத்தில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தார்...
மகள் சியானாவின் மருத்துவ கல்லூரி கட்டணம் மற்றும் இதர தேவைகளுக்கு நல்லுள்ளங்கள் பலரும் உதவியதாக கூறும் ஜாஸ்மின் மீதமுள்ள நான்கு பிள்ளைகளையும் வைராக்கியத்துடன் நன்கு படிக்க வைத்ததில்
2 -வது மகள் ஜெஸ்னா கொல்லம் திருவாங்கூர் மருத்துவ கல்லூரியிலும்,
3 -வது மகள் ஷெஸ்னா டெல்லி தியான்பூர் பல் மருத்துவ கல்லூரியிலும்,
4 வது மகன் சுல்பீகர் கொல்லம் அசீசியா மருத்துவ கல்லூரியிலும்,
5 வது மகன் அக்பர் பெங்களூர் ஶ்ரீநிவாசா கல்லூரியில் பல் மருத்துவமும் பயின்று ஐந்து டாக்டர்களின் தாயாக சமூகத்தில் உயர்ந்து நிற்கிறார் ஜாஸ்மின்...

தனது பிள்ளைகளின் கல்வி தேவைகளுக்காக நிறைய பேர் ஸதகாவாகவும், கொஞ்சம் பேர் கடனாகவும் உதவியதாக கூறும் ஜாஸ்மினை கேரளாவில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம்
Eminent Women of the Year என்று விருது வழங்கி கடந்தாண்டு கவுரவித்தது...

Colachel Azheem

No comments: