Monday, July 29, 2019

சிந்தனையாட்டம் ....

Abdul Gafoor


நேர்மையாடுகிற உள்ளத்தின்
செயல்களில் உண்மையாடும்
அலையாடுகிற கடலின்
நுரைகளில் வெண்மையாடும்
கலையாடுகிற சிற்பத்தில்
சிற்பியின் திறமையாடும் ....


விலையாடுகிற பொருளில்
காசுகளின் பேரமாடும்
உலையாடுகிற அடுப்பில்
உணவுகளின் கலவையாடும்
உரையாடுகிற நாவில்
உணர்வுகளின் வார்த்தையாடும் ....

மயிலாடுகிற மழையினில்
துளிகளில் வண்ணமாடும்
வெயிலாடுகிற அனலினில்
தேகத்தில் வியர்வையாடும்
துயிலாடுகிற கனவினில்
படுக்கையில் இருட்டாடும் ....

மோகமாடுகிற காதலில்
காதலரின் அன்பாடும்
சோகமாடுகிற துயரத்தில்
இழப்புகளின் கவலையாடும்
வேகமாடுகிற பந்தயத்தில்
வெற்றியுறும் விவேகமாடும் ....

தாகமாடுகிற தொண்டையில்
குடிநீரின் ஈரமாடும்
தேகமாடுகிற குளிரினில்
சூட்டேற்றும் போர்வையாடும்
ராகமாடுகிற இசையினில்
சங்கீதத்தின் சுரங்களாடும் ....

நேசமாடுகிற வாழ்க்கையில்
இனிமையான பாசமாடும்
வாசமாடுகிற மலர்களில்
தேனுறிஞ்ச வண்டுகளாடும்
விரலாடுகிற ஓவியத்தில்
வர்ணங்களின் ஜாலமாடும் ....

நரையாடுகிற முதுமையில்
இளமையின் நினைவுகளாடும்
காட்சியாடுகிற திரையினில்
கற்பனையின் கதைகளாடும் ....

சந்தமாடுகிற கவிதையின்
வாக்கியங்களில் வர்ணனையாடும்
பந்தமாடுகிற உறவின்
மனங்களில் இணக்கமாடும் ....

நன்மையாடும் தொழுகையில்
சுவர்க்கத்தின் சிந்தனையாடும்
இன்பமாடும் சுவர்க்கத்தில்
வாழ்வதில் சுகமாடும் ....

அப்துல் கபூர் Abdul Gafoor
29.07.2019 ....

No comments: