Monday, January 11, 2021

அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்யச் சொன்ன அண்ணலே...

 

விடிகாலை

விழிகள் திறப்பது முதல்

விழிமூடி

இரவின் மடியில்

படுப்பது வரை

அல்லாஹ்வின் பெயரால்

ஆரம்பம் செய்யச் சொன்ன

அண்ணலே...

இறை நினைவுகளால்

இமைப் பொழுதும்

இதயங்களை

இயங்கச் செய்த

அகிலத்தின் வள்ளலே ...

பிஸ்மில்லாஹ்

அல்ஹம்துலில்லாஹ்

சுப்ஹானல்லாஹ்

தவக்கல்து அலல்லாஹ்

மாஷா அல்லாஹ்

ஹஸ்புனல்லாஹ்

ஹஸாக்கல்லாஹ்

பாரக்கல்லாஹ்

அல்லாஹ் அல்லாஹ் என்றே

இறைப்பெயரை

உச்சரிக்க வைத்து

சாத்தானின்

மாய வலையிலிருந்தும்

அவூதுபில்லாஹ் எனச் சொல்லி

எங்களை

தப்பிக்க வைத்த

அண்ணலே

#யா_ரஸூலல்லாஹ் ...

உண்ணும்போதும்

அவனைச் சொல்கிறோம்

உடுக்கும் போதும்

அவனைத் துதிக்கிறோம்

கதிரவன் உதிக்கும் போது

அவனைப் புகழ்கிறோம்

காலைக் கடனை முடிக்கும் போதும்

அவனைத்தான் துதிக்கிறோம்

உறவை இழந்தோர்

கண்ணீர் வடிக்கும் வேதனையில்

நல்லகாலை என்று

யாரும் சொல்ல முடியாத நிலையிலும்

ஸலாம் சொல்ல வைத்த

நல்லார் நபிகள் நாயகமே

அஸ்ஸலாமு அலைக்கும் என்பதிலும்

அழகான அர்த்தங்களை

குவித்து வைத்து

கொந்தளிக்கும் நெஞ்சுக்குள்ளும்

இறைவனின்

சாந்தியையும் சமாதானத்தையும்

நிலவச் செய்த

உங்கள் பெருங்கருணையைச்

சொல்லவும் வார்த்தைகளுண்டோ

#யா_ஹபீபல்லாஹ் 

இன்பத்திலும் துன்பத்திலும்

நிலை தடுமாறாதிருக்க

நிதானத்தை

சீதனமாகத் தந்த

சீதள நபியே

உங்கள் புகழை

ஒவ்வொரு நாளும்

சொல்லத் துணிந்த

இந்த எளியவன்

எண்ணங்களும்

எழுத்தாய் மலர

ஏகனவன் அருளும்

இறைத்தூதர் தங்களது வாழ்த்தும்

வரமாய் வரவேண்டும்

#இன்ஷா_அல்லாஹ் !

#அஸ்ஸலாமு_அலைக்க_யாரஸூலல்லாஹ்

#அஸ்ஸலாமு_அலைக்க_யாஹபீபல்லாஹ்




No comments: