Monday, October 27, 2014

உதடுகளில் உற்பத்தியானவை.- சேவியர்

எத்தனையோ விதமாய்
என்னைச் சுற்றிலும்
மனிதர்கள்.

பலரின்
புன்னகைக் கிடங்குகள்
பூப்பதை நிறுத்தினாலும்,
உதட்டுச் சந்தை
அதை
வினியோகிக்க மறக்காது.

சிலரோ
மூடிவைத்த சீசாவுக்குள்
மூச்சு முட்ட
பூத்துக் குலுங்குவார்கள்.

மிதமாய் பூத்து
அதை
இதமாய் தருபவரும் உண்டு.

பூக்காதவர்கள்
இருக்க இயலாது,
ஆனால் என்ன ?
சிலர்
வசந்த காலத்தில் மட்டுமே
வருவேன் என்கிறார்கள்.

சிலர்
பனியில் மட்டுமே
பூப்பேன் என்கிறார்கள்.

இன்னும் சிலர்
வெயில் வரட்டும்
பூக்களை விளைவிக்கிறேன்
என்கிறார்கள்.

வாடாமல்லியாய்
நிலைப்பதும்,
பத்துமணிப் பூவாய்
பட்டென்று ஓய்வதும்,

ரோஜாவாய் ராஜ்ஜியம் ஆள்வதும்,
கள்ளியாய்
தூரமாய் பூப்பதும்
செடிகளின்
சம்மதத்தைப் பொறுத்தது.

ஏதேனும்
ஓர் பூ கிடைக்கும் வரை
செடிச் கடைகளை
தேடித் திரியும்
தேனீயாய் நான்.

தேனீக்கும் எனக்கும்
ஒரே ஒரு
சின்ன வித்தியாசம்.

தேனீக்கள்
ஆதாயத்துகாய்
ஆழமாய் குழி தோண்டும்
அசலூர்க்காரன்.

நான்
பூக்களைப் பூக்களால்
பறிக்க நினைக்கும்
பண்டமாற்றுக் காரன்.

No comments: