Saturday, January 10, 2015

கவிதை எழுதுவதை உயிர்ச் சிலிர்ப்பாய்க் கொண்டு எழுதிய கவிதை

தமிழ்க் கவிஞர்களே கொஞ்சம் இசைகூட்டிக் கவிதை எழுதிப் பாருங்கள். நெஞ்செல்லாம் தித்திக்கும் நினைவெல்லாம் நீங்காமல் நிலைக்கும் அதன் மயக்க வரிகள் அத்தனையும். வெறுமனே மொழியாக்கச் சொற்களைச் சுத்திச்சுத்தி எதைக் கட்டப் பார்க்கிறீர்கள்? கவிதைத் தமிழின் இயற்கையான செழுமைகளைக்கொண்டு கருத்துகளைக் கட்டி அதற்குச் சொல்லிறகுகள் பூட்டி கற்பனை வானில் பறக்கவிட்டுப் பாருங்கள்

வெள்ளிப் பௌர்ணமியே


வெள்ளிக் கால்கொலுசு
வீதியெல்லாந் தாளமிட
முல்லைச் சிரிப்புதிர்த்து
முந்தானைக் கையசைத்து

வெள்ளிப் பௌர்ணமியே
விரைகிறாயடி - மனதைக்
கிள்ளித் தவிக்கவிட்டே
மறைகிறாயடி

அல்லிக் குளத்தினிலே
அந்தியொளி மஞ்சளிலே
மெல்ல நீரிறைத்து
முகப்பூவை ஈரமாக்கிப்

புள்ளி இளமானே
நிற்கிறாயடி - நெஞ்சை
அள்ளிப் பனிமடியில்
வைக்கிறாயடி

உள்ளக் கனவுகளை
ஒருவருக்கும் சொல்லாமல்
நெல்லி மரத்தடியில்
நெடுநேரம் தலைசாய்த்து

மெல்ல வேறுலகம்
நுழைகிறாயடி - என்பால்
உள்ளம் உருகுவதை
ரசிக்கிறாயடி

கள்ளக் கண்ணோட்டம்
கண்மணியே போதுமினி
உள்ளம் எனக்கென்றே
உருகிவரும் சத்தியத்தைக்

கிள்ளை மொழியாலே
சொல்லிவிடடி - என்னைக்
கொல்லும் தவிப்பினையே
கிள்ளிவிடடி

 அன்புடன் புகாரி
நன்றி : http://anbudanbuhari.blogspot.in\

No comments: