Showing posts with label மழைத்துளி. Show all posts
Showing posts with label மழைத்துளி. Show all posts

Friday, August 22, 2014

சூரியன் பண்பலை நடத்திய வைரத்தின் நிழல்கள் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி
என்ன சொல்லி விழுகிறது
ஏன்
ஆயிரம் கண்களால் அழுகிறது ?

கருக்கொண்ட முகிலின்
கதவுடைத்த
குறைப் பிரசவக் குழந்தையா ?

மேகத் தொட்டிலில்
புரண்டு படுக்கையில்
தவறி விழுந்த மழலையா ?

ஒருவேளை,
புகுந்தவீட்டுப் பயத்தில்
தாவித் தவிக்கும்
தளிர் பருவக் குமரியோ ?

ஈரம் கசியக் கசிய
என்னதான் சொல்கிறது மழை ?

Monday, November 11, 2013

பூக்களில் உறங்கும் மெளனம்

     பூவுக்குள் கவியொன்றே புதைந்தி ருக்கும்
    ...புன்னகையின் சாந்தத்தைப் போர்த்தி ருக்கும்
    நாவுக்கும் தெரியாத நாதத் தென்றல்
    ...நறுமுகையாய் சிறுவிதையாய் ஒளிந்தி ருக்கும்.
    பாவொன்று படம்பிடித்து எழுத வந்த
    ...பாவலனென் கவிதையிலே இடம்பி டிக்கும்
    தாவென்று கேட்போர்க்கு தந்து நிற்கும்
    ...தனிச்சிரிப்பின் நற்சிறப்பை பூவில் கற்போம்!

    வான்சிந்தும் மழைத்துளியில் உழவர் இன்பம்
    ...வைத்திருக்கும் இறையோனே பூவைத் தந்தான்
    தேன்சிந்தும் பூமலரும் காதல் சொல்லும்
    ...துணைசேரும் உலகத்தில் உயிர்கள் பூக்கும்
    தானேந்தும் புன்சிரிப்பைத் தொற்ற வைக்கும்
    ...தன்மகிழ்வை பிறமுகத்தில் பற்றச் செய்யும்
    ஏனென்று கேளாமல் எங்கும் பூக்கும்
    ...எல்லாமே சமமென்று எடுத்துச் சொல்லும்