Thursday, July 16, 2015

விண்ணைத் தொட சதாநேரமும் கனவு கவிதைகளோடு!

எல்லாமே கவிதை - மொழிச் சித்திரம் / தாஜ்
---------------------------------------------------------
சிரிப்பதோர் கவிதை
அழுவதோர் கவிதை
முறைப்பது முணங்குவது கவிதை
காட்டுக்கத்தல் மௌனப் பேச்சு மட்டுமின்றி
உறங்குவதும் விழிப்பதும் கூட கவிதை
உண்ணுவதும் கவிதையென்றால்
உண்ணா நோன்புமோர் கவிதை!
காதல் என்றைக்கும்
வாழும் ஜீவகவிதை இங்கே!
காதலன், காதலிக்கு வசீகரிக்கும் கவிதையெனில்
காதலி, காதலனுக்கு மதி மயக்கும் கவிதை!
கணவனுக்கு அடங்கா மனைவி
மனைவிக்கு விளங்கா கணவனும் கூட
தாம்பத்திய கவிதைதான்!
பெற்றெடுக்கும் குழந்தைகள்
நவரச கவிதைகளாகி போக
கண்விழிக்கா கவிதை போல்
நாம்தான்
தூக்கத்தில் விரைகிறோம்
விண்ணைத் தொட
சதாநேரமும் கனவு கவிதைகளோடு!

No comments: