கொஞ்ச நாளைக்கு முன்பு திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் அறுபதாம் கல்யாண விழாவுக்கான அழைப்பு வந்தது எனக்கு. இன்றும் கமகமவென மணத்துக்கொண்டிருக்கும் பத்திரிக்கை. ரொம்பக் குறைவாக ஆயிரம் பேரை மட்டும் அழைத்திருப்பதாகவும் (!) நான் அந்த ஆயிரத்தில் ஒருவன் என்றும் அறிந்து ஆனந்தம்கொண்டேன்! லேனாவோடு சில முறை பேசியிருக்கிறேன். ரொம்ப எளிமையாகவும் அன்பாகவும் பழகுவார். ஒருமுறை எங்கள் கல்லூரியில் பேசியிருக்கிறார். காரைக்குடியில் சில கூட்டங்களில் நானும் அவரும் பேசியிருக்கிறோம். தமிழ் நாட்டில் கையில் ஸ்டாப் வாட்ச் வைத்துக்கொண்டு பேசும் ஒரே நபர் அவர்தான்! நான் அவருக்கு நேர் மாறான ஆள்! ஆனாலும் ’ஸ்டாப்’ என்று அடுத்தவர் சொல்லும் முன் அல்லது நினைக்கும் முன் நிறுத்திவிடுவேன்!
