”இந்தியாவுக்கு என்று தனி பாரம்பரியம் உண்டு. நம்முடைய பண்பாடு, கலாசாரம், மதிப்பீடுகள் உன்னதமானவை. ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் பிறந்து வளர்ந்த எவரும் வயதில் பெரியவர்களை அவமானப்படுத்த மாட்டார்கள். உதவி செய்தவர்களை எட்டி உதைக்க மாட்டார்கள். நெருக்கடியில் கூட இருந்தவர்களை ஒதுக்கி வைக்க மாட்டார்கள்.
”ஆனால் சோனியா காந்தி இது அனைத்தையும் செய்தார். இந்தியாவுக்கு வந்து இங்கே குடியேறி, மிக உயர்ந்த குடும்பத்தில் ஒரு உறுப்பினராக 40 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த பிறகும்கூட எந்த ஒரு இந்திய பெண்ணும் செய்ய துணியாத காரியங்களை அவர் செய்தார். இதற்கு காரணம், அவர் இன்னமும் உண்மையில் ஓர் இந்தியனாக மாறவில்லை என்பதாகவே இருக்க முடியும்”.
இப்படி சொல்லி இருக்கிறார் நட்வர் சிங். முன்னாள் அதிகாரி. அரசியல்வாதி. அமைச்சர். 40 ஆண்டுகளாக நேரு குடும்பத்தின் விசுவாசியாக தன்னை காட்டிக் கொண்டதில் பெருமை அடைந்தவர். ஒரு ஜென்ம்ம் போதாது என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டுள்ள புத்தகத்தில் இதுவரை யாருக்கும் தெரியாத தகவல்கள் என்று பல விஷயங்களை அள்ளி தெளித்து இருக்கிறார்.


