காலை உணவின் முக்கியத்துவம் அறியாமல் இருப்பது ஏன்?
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி ...
இறைவன் தந்த அந்த அருட்கொடையான உணவை நாம் அவசர கோலத்தில் சாப்பிடுகின்றோம் . பல இறக்குமதிகளில் 'பாஸ்ட் புட்' ஒன்றாக சேர்ந்துக் கொண்டது. நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழ்வார் என்பது ஆன்றோர் மொழி . மென்று தின்றால் தேவையான உமிழ்நீர் உண்டாகி நமது உணவை நன்கு செரிக்கச் செய்கின்றது. நாமும் உணவு சாப்பிடும் போது இது இறைவனால் கொடுக்கப்பட்டது என அவனுக்கு நன்றி செலுத்தி மெதுவாக ரசித்து உண்ணும்பொழுது உடல் ஆரோக்கியம் கிட்டும் . இயற்கையின் இனிமை கண்டு ரசிப்பதும் அதனை ஆராய்ச்சி செய்வதும் நம்மை இறைவனது ஆற்றல் அறிய வழி வகுக்கின்றது. நாம் உண்ணும் உணவினை அனுபவித்து ரசித்து உண்பதில் நமது உடலுக்கு ஆரோகியதினை தருவது மட்டுமில்லாமல் நிச்சயமாக இறைவனது 'அல்லாஹ்வின்' (சிலர் இயற்கை என்று சொல்வார்கள்) ஆற்றல் அதில் அடங்கி இருப்பதனை அறிய வருகின்றோம். உண்ணும் உணவு எங்கிருந்து வந்தது என்பதனை என்றாவது சிந்தனை செய்து பார்த்தீர்களா! சோறு அரிசியிலிருந்து வந்தது .அரிசி நெல்லிருந்து வந்தது ... தொடருங்கள் ..உங்கள் சிந்தனையை . இறுதியில் உங்கள் முடிவு இறைவனது மாட்சிமை உங்கள் மனதில் அறிய வரும்.
சராசரி உடல் ஆரோக்கியத்திற்கு மனநல வளர்ச்சிக்கும் நல்ல சீரான உணவு அவசியமாகின்றது அது தேவையான உணவு எடுத்துக்கொள்ளும்போதுதான் வயதும் வாழ்கையும் முறைப்படும் .சிலர் வாழ்வதற்காக உணவு சாப்பிடுவார் .சிலர் சாப்பிடுவதற்காகவே வாழ்வர் . நாம் நல்வாழ்வு பெற ஆரோக்கியமான முறையான உணவு சாப்பிடுவதனை முறைப் படுத்திக் கொள்வோம் .
பெரும்பாலானவர்களுக்கு அலுவலக வேலைகளால் வீடுகளில் அல்லது ஹோட்டல்களில் கூட காலை டிபன் சாப்பிடுவதற்கு நேரமே இருக்காது. காலையில் எழும்போதே டென்சன், குளித்து முடித்து அலுவலகம் கிளம்புகையில் என்கேயாவது ஒரு காப்பி அல்லது சேண்ட்விச் அல்லது பிஸ்கட்டுடன் காப்பி அருந்தி விட்டு ஓடும் நிலை .பலரிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களில் காலை உணவைத் தவிர்ப்பதும் ஒன்றாகும். இதனை வெளிநாட்டிலும் பார்க்கலாம் . விடுமுறை நாட்களில் மட்டும் விரும்பிய காலை டிபன் (உணவை ) சாப்பிட வாய்ப்பு கிடைக்கும் .