Saturday, September 8, 2012

நினைவின் நதியில்.......

அவனைப் பார்த்தே
அநேக வருடங்கள் ஆகியிருந்தன
இன்னமும் நினைவிலிருக்கிறது
கடைசியாய் அவனுடன்
கொண்ட கோபம்

பள்ளிக்கூடக் குறிப்பேட்டில்
பதிந்திருந்த சச்சரவை
இருவருமே மறக்காமல்
இதயத்தில் குறித்துக்கொண்டோம்

கைகலப்பில் கீறல்கள்
உடலங்கள் மீதில்.

அவ்வப்போது
வரும் நினைவுகளிலும்
அவனுக்கு மட்டும் ஏனோ
கோப முகம்.

அன்றொரு நாள்
பழைய நண்பனின் திருமணத்தில்
பார்வையில் பட்டோம் பரஸ்பரம்

பாறையில் பூத்த மலராய்
பழைய கோபங்களின் மீது
பூத்த புன்னகை
பெருஞ்சிரிப்பாய் வெடித்த போது
நாங்கள்
பால்யத்துக்குத் திரும்பியிருந்தோம்.

 பக்ருதீன் இப்னு ஹம்துன்



No comments: